Tamilnadu

பக்கத்து வீட்டாருடன் சண்டை.. குழந்தையை கிணற்றில் தள்ளி கொலை செய்த சிறுவர்கள் : சிவகாசியில் பகீர் சம்பவம்!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மனைவி கவியரசி. இந்த தம்பதிக்கு பிரியதர்ஷன், தீனதயாளன் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இவர்களது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் அல்போன்சா. இவர் வீடு கட்டுவதற்காக வீட்டின் முன்பு மணல் இறக்கிவைத்திருந்தார். இதில் குழந்தை தீனதயாளன் விளையாடிக் கொண்டிருந்துள்ளான். இதைப் பார்த்த அல்போன்சா சிறுவன் தீனதயாளனைக் கண்டித்துள்ளார்.

இதனால் பார்த்திபன், அல்போன்சா வீட்டாருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அல்போன்சாவின் பேரன்கள் பிரவீன் குமார் மற்றும் அஜய் ஆகியோர் பார்த்திபன் மகன் தீனதயாளனைக் கடைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்னர் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை நீண்ட நேரமாகக் காணாததால் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். இதுகுறித்து அல்போன்சாவின் குடும்பத்தினரிடம் போலிஸார் விசாரணை செய்தனர்.

அப்போது, அல்போன்சாவின் பேரன்கள் பிரவீன்குமார், அஜய் ஆகியோர் தாங்கள் தான் குழந்தை தீனதயாளனைக் கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர். இவர்களின் வாக்குமூலத்தைக் கேட்டு போலிஸார் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர், சிறுவர்கள் கூறிய கிணற்றுப்பகுதிக்குச் சென்று குழந்தை தீனதயாளனின் உடலை போலிஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து இரண்டு சிறுவர்களையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட சண்டையில் குழந்தையைக் கிணற்றில் தள்ளி சிறுவர்கள் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: தையல் பழக வந்த 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை... அக்கா-மாமா இருவரும் போக்சோவில் கைது!