Tamilnadu

பா.ஜ.கவை சேர்ந்த நடிகை மீது கந்துவட்டி புகார்: தொடர்ந்து பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுப்பதாக பெண் கதறல்!

சின்னத்திரை நடிகையான ஜெயலட்சுமி பா.ஜ.கவில் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் மீது சென்னை பாடியைச் சேர்ந்த கீதா என்ற பெண் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை பாடி பகுதியைச் சேர்ந்தவர் கீதா. இவரது கணவர் உயிரிழந்த நிலையில் தனது பகுதியில் உள்ள பெண்களுடன் இணைந்து மகளிர் சுய உதவிக் குழு ஒன்றை நடத்தி வருகிறார். கீதா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை ஜெயலட்சுமி மீது பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

அவரது புகாரில், “பா.ஜ.கவைச் சேர்ந்த ஜெயலட்சுமி எங்கள் மகளிர் சுய உதவிக் குழுவுக்கு வங்கி மூலம் 10 பைசா வட்டியில் கடன் வாங்கித் தருவதாகக் கூறி 9 பெண்களுக்கு வங்கி மூலம் லோன் பெற்றுத் தந்தார். அதற்காக ஒவ்வொருவரிடம் இருந்து அவரவர் வங்கி காசோலைகளை ஜாமினாக பெற்றார்.

நாங்களும் மாதம் மாதம் பணம் செலுத்தினோம். தற்போது நாங்கள் கொடுத்த தொகையை வட்டி என்று கூறி, இன்னும் அசல் தொகையை கொடுக்கவில்லை என்று கூறுகின்றனர்.

மேலும், ஜெயலட்சுமி, அனகா மற்றும் வழக்கறிஞர் சார்லஸ் ஆகியோர் எங்கள் வீட்டுக்கு வந்து எங்களையும், எங்கள் வீட்டாரையும் கூண்டோடு அழித்து விடுவோம் என்று மிரட்டுகின்றனர். இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.கவைச் சேர்ந்த பலர் பண மோசடிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த நடிகை மோசடி மற்றும் கொலை மிரட்டல் வழக்கில் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “முன்னாடியே 3 கல்யாணம்.. மேட்ரிமோனி மூலம் மோசடி" - நகை, பணத்துடன் தப்பிய கணவர் மீது பெண் புகார்!