Tamilnadu

”நீட் தேர்வை எதிர்க்க தெம்பும் திராணியும் அற்றது அதிமுக” - பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடல்!

தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெற வலியுறுத்தி சட்டமன்றத்தில் மசோதாவை தாக்கல் செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அதனைத் தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,

அனிதா முதல் பல மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட போது மரண அமைதியில் இருந்தது அதிமுக ஆட்சிதான். நீட் தேர்வை எதிர்ப்பதற்கான தெம்பும், திராணியும் அதிமுக அரசுக்கு இல்லை.

கடந்த அதிமுக ஆட்சியில்தான் நீட் தற்கொலைகள் நிகழ்ந்தன. மாணவர் தனுஷின் தற்கொலைக்கும் அதிமுகதான் காரணம்.

நீட் தேர்வை ரத்து செய்து பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த திமுக அரசு உறுதி பூண்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித முன்னுரிமை ஒதுக்கீடு செய்யவும் முன்மொழியப்படுகிறது.

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் மசோதாவை எதிர்க்கட்சிகள் ஆதரிக்க வேண்டும். மருத்துவ மாணவர் சேர்க்கையில் நல்ல முடிவினை தி.மு.க அரசு எட்டும் எனக் கூறினார்.

மேலும், மருத்துவக் கல்விக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் 27 சதவிகித இட ஒதுக்கீட்டினை பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு பெற்று திமுக வரலாற்று சாதனை புரிந்துள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.