Tamilnadu

“நீட் தேர்வு மையத்திற்கு வழி தெரியாமல் தவித்த மாணவன்” : காரில் அழைத்து சென்று தேர்வு எழுதவைத்த ஆட்சியர்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற நீட் தேர்வுக்காக 2 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இதில், வாணியம்பாடி தனியார் மகளிர் கல்லூரி மருதர்கேசரி, ஜெயின் கல்லூரியில் 900 மாணவர்களும் எழுதுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதில், 32 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. 868 மாணவர்கள் தேர்வு எழுதினர். 

இந்நிலையில் வாணியம்பாடி தேர்வு மையத்தை பார்வையிட்டு பின்னர் ஏலகிரி மலை பகுதிக்கு செல்வதற்காக பொன்னேரி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா சென்றுக் கொண்டிருந்தார். அப்போது வழி தெரியாமல் நின்று மாணவரை பார்த்து அழைத்து விசாரித்தார்.

அவர் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் வட்டம் கீழ்கருப்பூர் கிராமத்தை சேர்ந்த வேடியப்பன் என்றும் நீட் தேர்வு எழுத செல்வதாகவும் கூறியுள்ளார். மேலும் தேர்வு மைத்திற்கு வழி தெரியாமல் நின்று கொண்டிருந்ததாகவும் கூறினார்.

இதனையடுத்து ஆட்சியர் அமர் குஷ்வாஹா மாணவரை தனது காரில் ஏறும்படி கூறினார். பின்னர் மாணவனை காரில் ஏற்றிகொண்டு உரிய நேரத்தில் ஏலகிரி மலைக்கு சென்று, டான் போஸ்கோ பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் தேர்வு எழுத வைத்தார். உரிய நேரத்தில் வழி தெரியாத மாணவனை தேர்வு மையத்திற்கு அழைத்து சென்ற மாவட்ட ஆட்சியருக்கு அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: “எது நடக்கக் கூடாது என நினைத்தோமோ, அது நடந்தது..” : மாணவன் தனுஷுக்கு அஞ்சலி செலுத்திய உதயநிதி உருக்கம்!