Tamilnadu

”கடைக்கு போனது குத்தமா?“ - சார்ஜரை கூட விட்டு வெக்காத கொள்ளையர்கள் - ராயப்பேட்டையில் நடந்த நூதன திருட்டு!

சென்னை ராயப்பேட்டை அங்கமுத்து தெருவில் வசித்து வருபவர் முகமது சலீம்(29). இவர் நேற்று மாலை குடும்பத்தோடு வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். பின்பு இரவு 9 மணியளவில் வீட்டுக்கு வந்த போது வீட்டின் கதவு மற்றும் ஜன்னல் கதவுகள் அனைத்தும் உள் பக்கம் தாழிட்டு இருந்துள்ளது. மேலும் உள்ளே மர்ம நபர்கள் பேசும் சத்தம் கேட்டதால் உடனடியாக ஐஸ்ஹவுஸ் போலிஸுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலிஸார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் எல்லாம் கலைக்கப்பட்டு இருந்துள்ளது. சோதனையில் பீரோவில் இருந்த 13 சவரன் நகை, வெள்ளி கொலுசு, லேப்டாப், மொபைல் போன் சார்ஜர், ரூ.2000 பணம் மேலும் வீட்டில் இருந்த மிக்ஸி, சில்வர் பாத்திரங்கள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

போலிஸார் விசாரணையில் கொள்ளையர்கள் வீட்டின் குளியலறையில் உள்ள ஜன்னலில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடியை கழட்டி வைத்துவிட்டு உள்ளே வந்துள்ளனர் என்பதும் பின்பு பொருட்களைக் கொள்ளை அடித்த பின் அதே வழியாக வெளியே சென்றுள்ளனர் என்றும் தெரியவந்தது.

இதையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலிஸார், அதே பகுதியைச் சேர்ந்த மூன்று நபர்கள் இந்த கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த அதே பகுதியைச் சேர்ந்த காந்தா (எ) உசேன் (29) நதீம் பாஷா (19) பில்லி ?எ) சமியுல்லா(25) ஆகிய மூவரையும் கைது செய்த போலிஸார் அவர்களிடம் இருந்து 4 சவரன் நகை, லேப்டாப், மிக்ஸி மற்றும் ஒரு திருட்டு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட மூன்று நபர்களிடமும் ஐஸ் ஹவுஸ் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: “இடிக்காம ஆடுடா..”: திருமண நிகழ்ச்சியில் போதையில் நடனம் ஆடியபோது ஏற்பட்ட தகராறில் 3 பேருக்கு கத்திகுத்து!