Tamilnadu

“நமக்கு சாதாரணமா தெரியுற விஷயம்.. ஆனா...” : நெகிழவைக்கும் குறும்படம்!

தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்த பிறகு செயல்படுத்தப்படும் ஒவ்வொரு திட்டங்களிலும் சாமானிய மக்களின் நீண்டகால நலனுக்கான குறிக்கோள் இருக்கிறது. ‘மகளிருக்கு இலவச பயணம்’ திட்டத்தின் சமூக நீதி குறிக்கோளை எடுத்தியம்பும் குறும்படம் ஒன்று வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற அன்றே உத்தரவிட்டபடி, அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசப் பயணம் செய்யும் திட்டம் மே 8ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.

இந்தத் திட்டத்தால் தமிழகம் முழுவதுமுள்ள பெண்களும், மாற்றுத்திறனாளிகளும், திருநங்கைகளும், அரசு நகரப் பேருந்துகளில் இலவசமாக மகிழ்ச்சியுடன் பயணம் செய்து வருகின்றனர்.

தினசரி வேலைகளுக்குப் போய் வர ஒரு குறிப்பிட்ட தொகை தேவைப்பட்ட சூழலில், பயணத்தை இலவசமாக்கியதால், கூலி வேலைகளுக்குச் செல்லும் லட்சக்கணக்கான பெண்கள் இத்திட்டம் தங்களுக்குப் பேருதவியாக இருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தி.மு.க அரசின் ‘இலவச பயணம்’ திட்டத்தால் பயன்பெறும் மூதாட்டி ஒருவரைப் பற்றி குறும்படம் ஒன்றை எடுத்துள்ளார் சலீம் மாலிக்.

‘உவகை’ என்ற இந்தக் குறும்படத்தில், பூ கட்டி விற்கும் மூதாட்டி ஒருவர் பேருந்துச் செலவு காரணமாக தினமும் காலை சாப்பாட்டு நேரத்தில் தேநீர் மட்டும் அருந்தி வியாபாரத்தைக் கவனித்து வருகிறார்.

தி.மு.க அரசு பொறுப்பெற்ற பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘மகளிருக்கு இலவச பயணம்’ திட்டத்தை அறிவித்த பிறகு, பேருந்து கட்டணம் சேமிக்கப்படுவதால் அம்மூதாட்டி தேநீருக்கு பதிலாக காலை உணவாக வயிறார இட்லி சாப்பிடுவதாக காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.

உண்மைச் சம்பவத்தைத் தழுவி இந்தக் குறும்படத்தை எடுத்திருப்பதாகக் கூறும் இயக்குநர் சலீம் மாலிக், தி.மு.க அரசின் திட்டத்தால் ஏராளமான பெண்கள் பயன்பெற்றதைக் கண்டு நெகிழ்ந்தே இந்தக் குறும்படத்தை எடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.

பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண திட்டத்தின்கீழ், 18 கோடியே 39 லட்சம் பெண்கள் பயனடைந்துள்ளதாகவும், நாள்தோறும் 34 லட்சம் பெண்கள் இலவசமாக பயணம் செய்வதாகவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: “பணியாளர்களுக்கு இருக்கை” : ஊழியர்கள் உள்ளத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!