Tamilnadu

”4 வருசமா ஆட்சியில் இருந்தது யாரு? தடை கேட்டது யாரு?” : சரமாரி கேள்விகளால் EPS-ஐ நிலைகுலையவைத்த முதல்வர்!

சட்டப்பேரவையில் இன்று பேசிய மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம், “கடந்த ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் கூலிப்படைகள் அட்டகாசம், செயின் பறிப்பு, கொலை கொள்ளை சம்பவம் அதிகரித்தது. கொடநாடு விவகாரம், ஜெயலலிதா மரணம் தமிழக மக்களிடையே மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது” எனத் தெரிவித்தார்.

மேலும், ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கை விரைவாக முடித்து உண்மை நிலையை வெளிக்கொண்டு வரவேண்டும் என கோரிக்கை வைத்தார்.

அப்போது எழுந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, “ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு குறித்து சட்டமன்றத்தில் விவாதிப்பது மரபு கிடையாது. அதனால் அவரின் பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்கவேண்டும்” என்று கூறினார்.

அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “உறுப்பினர் வழக்கின் விவரத்தையும், யார் மீது சந்தேகம் உள்ளது என்றும் பேசவில்லை. வழக்கு நடைபெற்று வருவதைப் பற்றியும் வழக்கை விரைந்து முடிக்கவேண்டும் என்றுதான் கூறியுள்ளார். எனவே உறுப்பினரின் பேச்சை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, தேர்தல் நேரத்தில் தங்கள் மீது வேண்டுமென்றே பழிச் சுமத்துவதாக பேசியதால் கொடநாடு விவகாரம் தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது.

எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கொலை, கொள்ளை நடந்த கொடநாடு சாதாரண இடமில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முகாம் அலுவலகமாக செயல்பட்டு வந்தது கொடநாடு இல்லம்.

கொடநாடு சம்பவங்கள் நடைபெற்ற போது அந்த இடத்திலிருந்து சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டது ஏன்? கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தின் போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி என்ன செய்தார்?

கொடநாடு வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றத்தில் தடை கோரி வழக்கு தொடரப்பட்டது ஏன்?” என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

Also Read: ஜெ. கொலை வழக்கை விரைந்து முடிக்க கோரிக்கை வைத்த தி.மு.க எம்.எல்.ஏ.. பேரவையில் வெலவெலத்துப்போன எடப்பாடி!