Tamilnadu

சாலையில் வலியோடு நடந்துச் சென்ற சிறுவன்.. பெற்ற மகனுக்குச் சூடுவைத்த கொடூரத் தாய் : அதிர்ச்சி தகவல்!

விழுப்புரம் மாவட்டத்தில் பெற்ற பச்சிளம் குழந்தையைக் கொடூரமாகத் தாய் தாக்கும் வீடியோ வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து தாயையும், இதற்குக் காரணமாக இருந்த காதலனையும் போலிஸார் கைது செய்தனர்.

இந்நிலையில், கடலூரில் இதேபோன்று ஒரு சம்பவம் நடந்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், திருப்பாதிரிபுலியூர் பகுதியில் சிறுவன் ஒருவன் உடல் முழுவதும் காயங்களுடன் சாலையில் நடந்து சென்றுள்ளான்.

இதனைப் பார்த்த போலிஸார், சிறுவனிடம் விசாரணை நடத்தினர். அப்போது சிறுவன் தனது தாய் கரண்டியை நெருப்பில் சுடவைத்து உடல் முழுவதும் சூடுவைத்து சித்ரவதை செய்ததாக கூறியுள்ளார். பின்னர் சிறுவனை போலிஸார் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு வீட்டிலிருந்த தாய் சாந்திதேவியைப் பிடித்து விசாரணை நடத்தினர். கணவன் உயிரிழந்த நிலையில் சாந்தி தேவி வேறு ஒருவருடன் பழகிவந்துள்ளார். இதனால் அவர் தனது மகனைச் சூடுவைத்துத் துன்புறுத்தி வந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சாந்தி தேவி மற்றும் அகமது ஆகிய இரண்டு பேரையும் போலிஸார் கைது செய்தனர்.

Also Read: “பெற்ற குழந்தையைக் கொடூரமாகத் தாக்கிய தாய் கைது” : காவல்துறை அதிரடி - வைரல் வீடியோவின் பின்னணி என்ன?