Tamilnadu

“கல்லெறியுறாங்க.. கொள்ளையடிக்குறாங்க” : பொய்யாக வீடியோ வெளியிட்டு போலிஸிடம் மன்னிப்பு கேட்ட நபர்!

இராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி நெடுஞ்சாலையில் வாகனங்கள் மீது கல்லெறிந்து, மர்ம கும்பல் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வருவதாக சமூக வலைதளங்களில் சில நாட்களுக்கு முன்பு வீடியோ ஒன்று வெளியானது.

இந்த வீடியோவை பார்த்த போலிஸார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். வீடியோவில் கூறப்பட்டுள்ள இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர். ஆனால் வீடியோவில் தெரிவிக்கப்பட்டதுபோல் கொள்ளைச் சம்பவம் நடந்ததற்காக எந்தத் தடயமும் போலிஸாருக்கு கிடைக்கவில்லை.

இதையடுத்து இந்த வீடியோவை யார் வெளியிட்டது என்பது குறித்து விசாரணை நடத்தியதில் மதுரையைச் சேர்ந்த ராம்குமார் என்பது தெரியவந்தது. பிறகு அவரிடம் விசாரித்தபோது, வீடியோவில் வருவதைப் போல் ஒரு கொள்ளைச் சம்பவமே நடைபெறவில்லை என்றும் தானே கட்டுக்கதையை உருவாக்கிப் பேசியதாகவும் ராம்குமார் ஒப்புக்கொண்டுள்ளார்.

பிறகு தவறாக வீடியோ வெளியிட்டதற்கு போலிஸிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். மேலும் இந்த வீடியோ போலியானது என்பதை அவர் வாயாலேயே சொல்வதை போலிஸார் வீடியோ பதிவு செய்தனர். இந்த வீடியோ குறித்து ராம்குமாரிடம் போலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: சென்னையை அதிரவைத்த வழிப்பறி கும்பல்... காட்டிக்கொடுத்த ’வெள்ளை செருப்பு’... 3 பேர் கைது - நடந்தது என்ன?