Tamilnadu

“ஆடிட்டரை கொன்று புதைத்தது ஏன்?” : கொலையாளி அளித்த அதிர்ச்சி வாக்குமூலம் - வழக்கில் திடீர் திருப்பம்!

சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் ஆடிட்டர் ஜனரஞ்சன் பிரதான் (48). கடந்த 27ஆம் தேதி கிருஷ்ணகிரி சென்ற இவர் திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது மனைவி பூர்ணிமா, கிருஷ்ணகிரி டவுன் போலிஸில் புகார் செய்தார்.

போலிஸார் நடத்திய விசாரணையில் ஆடிட்டர் ஜனரஞ்சன் பிரதானை ஒரு கும்பல் கடத்திச் சென்று கொன்று, சாமல்பட்டி அருகே மாந்தோப்பில் புதைத்தது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்கறிஞர் கிருஷ்ணகுமார், சபரீஷ், ஜிம் மோகன் உள்ளிட்ட ஒன்பது பேரை போலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான சபரீஷ் போலிஸாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் அதிர்ச்சி தகவல்களை தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சபரீஷ், கடந்த ஒரு வருடத்திற்கு முன் சென்னையில் வாடகை வீட்டில் குடியேறி, விளம்பர படங்கள் எடுக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அப்போது வழக்கறிஞர் கிருஷ்ணகுமாருடன் சபரீஷுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரிடம் தனக்கு வங்கியில் ரூ.35 கோடி கடன் வாங்குவதற்கு உதவும்படி சபரீஷ் கேட்டுள்ளார்.

அதற்கு அவர், தனது நண்பரான ஆடிட்டர் ஜனரஞ்சன் பிரதானை அறிமுகம் செய்து வைத்துள்ளார். இருவரும் ஜனரஞ்சன் பிரதானை சந்தித்தபோது, ரூ.30 கோடிக்கு கடன் பெற்று தருவதாகவும், அதற்கு கமிஷனாக முன்னதாகவே ரூ.3.50 கோடியை தனக்கு தர வேண்டும் எனவும் ஜனரஞ்சன் பிரதான் தெரிவித்துள்ளார்.

அவர் கேட்டபடி ரூ.3.50 கோடியை ஜனரஞ்சனிடம் சபரீஷ் கொடுத்துள்ளார். ஆனால், அவர் கடன் வாங்கிக் கொடுக்கவில்லை. இதையடுத்து சபரீஷ் பெரம்பலூருக்கு வந்துவிட்டார்.

இந்நிலையில் சென்னை மற்றும் ஐதராபாத்தில் பண மோசடியில் ஈடுபட்டதாக, ஜனரஞ்சன் பிரதானை காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைத்துள்ளதாக செய்தியை பார்த்த சபரீஷ், சிறைக்குச் சென்று அவரை பார்த்துள்ளார்.

அப்போது தன்னை ஜாமீனில் எடுத்தால் பணத்துக்கு ஏற்பாடு செய்வதாக கூறவே, ஜாமீனில் எடுக்க பண உதவி செய்துள்ளார் சபரீஷ். அதனைத்தொடர்ந்து, பணத்தை தரும்படி கேட்டபோது, ஜனரஞ்சன் பிரதான் தராமல் இழுத்தடித்துள்ளார்.

இஇந்நிலையில், கிருஷ்ணகுமாரும், சபரீஷும், கிருஷ்ணகிரியில் ஒருவருக்கு கடன் வேண்டும் என்றும் அவரை பார்க்க செல்லலாம் என்றும் கூறி ஜனரஞ்சன் பிரதானை அழைத்துக்கொண்டு, சாமல்பட்டிக்கு வந்துள்ளனர்.

அப்பகுதியை சேர்ந்த திருமால் என்பவரின் வீட்டில் அவர்கள் மது அருந்தியுள்ளனர். அப்போது ரூ.3.50 கோடி தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சபரீஷ் உள்ளிட்ட கும்பல், ஜனரஞ்சன் பிரதானை கட்டையால் தாக்கிக் கொலை செய்து மாந்தோப்பில் புதைத்துள்ளனர்.

விசாரணையில் சபரீஷ் அளித்த வாக்குமூலம் போலிஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சபரீஷின் வாக்குமூலத்தை தொடர்ந்து போலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Also Read: “கொடநாடு கொள்ளைக்காக அ.தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற தகிடுதத்தங்கள்” : அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பொன்தோஸ்!