Tamilnadu

ஃபேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டு மலையுச்சியில் இருந்து குதித்த காதலன் உயிரிழப்பு - ஆபத்தான நிலையில் காதலி!

திருப்பூர் மாவட்டம் உடுமலையிலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ளது கேரளா மாநிலத்தின் மறையூர். மறையூர் அருகே பெரும்பாவூர் பகுதியைச் சார்ந்த நாதிர்ஷா என்பவரும் மறையூர் நிகிலா தாமஸ் என்பவரும் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக காதலித்து வந்துள்ளனர்.

இவர்களது காதலுக்கு இருவரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, மறையூர் அருகே உள்ள பிரம்மரம் ஷூட்டிங் ஸ்பாட்டில் மலை உச்சியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவில் அங்கு சென்று நீண்ட நேரம் அமர்ந்துள்ளனர்.

பின்னர் இருவரும் கையை கத்தியால் அறுத்துக் கொண்டனர். இரத்தம் அதிகமாக வெளியேறிய சிறிது நேரத்தில் இருவரும் மயங்கி விழுந்தனர். மலை உச்சியில் அமர்ந்து இருந்ததால் நாதிர்ஷா உருண்டு விழுந்து இறந்தார். நிகிலா தாமஸ் மட்டும் மலை உச்சியில் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்ட காவல்துறை அதிகாரிகள் கோட்டயம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நாதிர்ஷா உடல் மலை அடிவாரத்தில் மீட்கப்பட்டது. இருவரும் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் ஃபேஸ்புக்கில் வீடியோ ஒன்றை பதிவு செய்தனர். அதில் தாங்கள் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகக் கூறியுள்ளனர்.

மறையூர் காவல்துறை அதிகாரிகள் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Also Read: “இதுபோன்ற அரசியலை நான் பார்த்ததில்லை; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அசத்துறாரு” : விஜய் சேதுபதி பாராட்டு!