Tamilnadu

“தாலிக்கு தங்கம் திட்டம் ரத்தா?” : அவதூறு பரப்பும் அ.தி.மு.கவினர்.. உண்மை என்ன?

திருமண நிதியுதவி திட்டத்தால் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு முழுமையான பலன் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் தி.மு.க அரசு புதிய விதிமுறைகள் வகுத்திருப்பது குறித்து, திருமண நிதியுதவி திட்டத்தை தி.மு.க அரசு முடக்க நினைப்பதாக அ.தி.மு.கவினர் அவதூறு பரப்பி வருகின்றனர்.

தமிழ்நாடு அரசின் சமூகநலத்துறை மூலம் வழங்கப்படும் திருமண உதவித்தொகை திட்டமான ‘தாலிக்கு தங்கம்’ திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான புதிய விதிமுறைகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

1989ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர், திருமண நிதி உதவி தொகை திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தில் தாலிக்கு தங்கமும் சேர்த்து அ.தி.மு.க ஆட்சியில் வழங்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ், பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.50,000 பணமும், அதற்கு கீழ் கல்வி தகுதி உள்ள பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் 25,000 ரூபாய் பணமும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், தாலிக்குத் தங்கம் திட்டத்தை செயல்படுத்துவதற்கு புதிய விதிமுறைகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இத்திட்டம் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வீட்டில் யாரேனும் அரசுப் பணியில் இருந்தாலும் அல்லது வேறு ஏதாவது திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் உதவி பெற்றிருந்தாலும் ஆய்வு செய்து அப்படி இருப்பின் அந்த விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படவேண்டும்.

திருமண நிதி உதவிக்கு விண்ணப்பிக்கும் மணமகளுக்கு 18 வயதும் மணமகனுக்கு 21 வயதும் நிறைந்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

விண்ணப்பிக்கும் நபர்கள் நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்கக்கூடாது. மாடி வீடு இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் மனு தள்ளுபடி செய்யப்படவேண்டும்.

குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ 72,000க்குள் இருப்பதற்கான வருமான சான்றிதழை அரசு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் திருமண நிகழ்ச்சி திருமண மண்டபங்களில் நடந்திருந்தால் தாலிக்கு தங்கம் திட்டத்தில் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும்.

பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையிலும் ஏழை பெண்களின் திருமணத்திற்கு உதவி செய்யும் வகையிலும் அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

அரசின் புதிய அறிவிப்பினால் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு திட்டத்தின் பலன்கள் விரைவில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு இத்திட்டத்தால் முழுமையான பலன் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டிருப்பதை உணராமல், திருமண நிதியுதவி திட்டத்தை தி.மு.க அரசு முடக்க நினைப்பதாக அ.தி.மு.கவினர் அவதூறு பரப்பி வருகின்றனர்.

Also Read: "அண்ணா சாலையில் முத்தமிழறிஞர் கலைஞருக்கு சிலை" : பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!