Tamilnadu

மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில் செய்த பா.ம.க. நிர்வாகி? நால்வர் தலைமறைவு.. போலிஸார் வலைவீச்சு!

மதுரை காமராஜர் சாலையில் Blooming Day Spa என்ற பெயரில் கடந்த 2 ஆண்டுகளாக மசாஜ் சென்டர் இயங்கி வருகிறது. ஆனால் அங்கு மசாஜ் வேலைக்கு பதிலாக பாலியல் தொழில் நடப்பதாக ஆட்கடத்தல் தடுப்புப்பிரிவு காவல் ஆய்வாளரான பிளவர் ஷீலாவுக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

இதனையடுத்து அந்த மசாஜ் சென்டருக்கு வாடிக்கையாளர்கள் போல சென்று போலிஸார் ஆய்வு நடத்தியிருக்கிறார்கள். அப்போது மேற்கு வங்கம், கர்நாடகாவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் மற்றும் மதுரை, திண்டுக்கலைச் சேர்ந்த 3 பெண்களை மீட்டனர்.

ஸ்பா ஊழியராக இருந்த மதுரை மேலமாசி வீதியைச் சேர்ந்த சதீஷ் (35) மற்றும் ஷாலினி (24) ஆகியோரை கைது செய்தனர். மேலும், மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த பாமக மாநில இளைஞரணி துணைத்தலைவர்தான் இந்த மசாஜ் சென்டருக்கு உரிமையாளர் எனவும் கூறப்படுகிறது.

பாமக நிர்வாகியும் மனித உரிமை அமைப்பில் தலைவராக உள்ள அவரது நண்பரும் இணைந்துதான் இந்த மசாஜ் சென்டரை கடந்த 2 ஆண்டுகளாக நடத்தி வருவதாகவும், இடைத்தரகர்கள் மூலம் வெளி மாநிலங்களில் இருந்து பெண்களை வரவழைத்து பாலியல் தொழிலில் ஈடுபட வைத்ததாகவும் போலிஸார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அவ்வாறு வரும் பெண்களுக்கு மாதம் 15 ஆயிரம் சம்பளமும் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஸ்பாவுக்கான செயலி மூலம் தொடர்புகொள்வோரை நேரில் வரவழைத்து கட்டண விவரங்களை சொல்லி பாலியல் தொழிலை கமுக்கமாக செய்து வந்திருக்கிறார்கள்.

இந்த விவகாரம் குறித்து போலிஸாருக்கு தகவல் சென்றதும் பாமக நிர்வாகியையும் அவரது கூட்டாளிகள் மூவரும் தலைமறைவானதால் அவர்களை தேடும் பணியில் தற்போது போலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Also Read: “பெற்ற குழந்தையைக் கொடூரமாகத் தாக்கிய தாய் கைது” : காவல்துறை அதிரடி - வைரல் வீடியோவின் பின்னணி என்ன?