Tamilnadu

“காழ்ப்புணர்ச்சியோடு செயல்பட்டிருந்தால் அம்மா உணவகம் இன்று இருக்காது” : முதலமைச்சரின் நெத்தியடி பதில்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

சட்டப்பேரவையில் இன்று விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் தி.மு.க அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சரும், அ.தி.மு.க எம்.எல்.ஏவுமான அன்பழகன் குற்றம்சாட்டினார்.

அவருக்கு பதிலளித்துப் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் நாங்கள் காழ்ப்புணர்ச்சியுடன் நடந்துகொள்ளவில்லை. அவ்வாறு காழ்ப்புணர்ச்சியோடு நாங்கள் நடந்து கொண்டிருந்தால் அம்மா உணவகம் தற்போது செயல்பட்டு இருக்காது.

காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படும் எந்த எண்ணமும் கழக அரசுக்குக் கிடையாது. காழ்ப்புணர்ச்சியோடு செயல்படவில்லை என்று துறை அமைச்சர் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்” எனத் தெரிவித்தார்.

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில், “ஜெயலலிதா பெயரை வைக்கவேண்டும் என்பதற்காகவே பல்கலைக்கழகம் பெயரளவில் மட்டுமே தொடங்கப்பட்டது. அ.தி.மு.க ஆட்சியில் பல்கலைக்கழகத்திற்கு தேவையான நிதியோ இடமோ ஒதுக்கப்படவில்லை” எனத் தெரிவித்தார்.

Also Read: "அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்படிப்புகளில் 7.5% உள் ஒதுக்கீடு” : மசோதாவை தாக்கல் செய்த முதலமைச்சர்!