Tamilnadu

“எழுத்தாளர்களின் படைப்புகளை அரசியல் - மதவாத கண்ணாடி அணிந்து பார்ப்பதா?” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

டெல்லி பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களான பாமா, சுகிர்தராணி ஆகியோரின் படைப்புகள் இடம்பெற்றிருந்தன. அவை துறை பேராசிரியர்களுக்கு தெரியாமலேயே இரவோடு இரவாக படைப்புகள் நீக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி பல்கலைக்கழக ஆங்கிலத்துறையின் பாடத்திட்டத்தில் இருந்து தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

"எழுத்தாளர் பாமா, கவிஞர் சுகிர்தராணி ஆகியோரின் எழுத்துகளைக் கட்சி அரசியல் - மதவாதக் கண்ணாடிகள் அணிந்து பார்க்கும் வழக்கத்தைக் கைவிட்டு, அவற்றை டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் மீண்டும் சேர்த்திட வேண்டும்!" என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்த தமிழ் எழுத்தாளர் பாமா அவர்களின் சங்கதி, தமிழ்க் கவிஞர் சுகிர்தராணி அவர்களின் கைம்மாறு, என்னுடல் ஆகிய மொழியாக்கப் படைப்புகளை அந்தத் துறை பேராசியர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லாமலேயே மேற்பார்வைக் குழுவின் ஆலோசனையின் பெயரில் பல்கலைக்கழக நிர்வாகம் நீக்கியிருப்பது ஒருதலைப்பட்சமான முடிவு. இது எவ்வகையிலும் ஏற்க முடியாத செயலாகும்.

பெண்கள் உரிமை - ஒடுக்கப்பட்டோர் விடுதலை - மானுட மேன்மை குறித்து பல படைப்புகளை வழங்கி வரும் எழுத்தாளர் பாமா, கவிஞர் சுகிர்தராணி ஆகியோரின் எழுத்துகளைக் கட்சி அரசியல் - மதவாதக் கண்ணாடிகள் அணிந்து பார்க்கும் வழக்கத்தைக் கைவிட்டு, அவற்றை டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் மீண்டும் சேர்த்திட வேண்டும் எனப் பல்கலைக்கழக நிர்வாகத்தையும் ஒன்றிய அரசையும் வலியுறுத்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “காழ்ப்புணர்ச்சியோடு செயல்பட்டிருந்தால் அம்மா உணவகம் இன்று இருக்காது” : முதலமைச்சரின் நெத்தியடி பதில்!