Tamilnadu

"அ.தி.மு.க ஆட்சியில் உங்க ஊரிலேயே பயிர்க்கடன் முறைகேடு" : செல்லூர் ராஜூவுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர்!

அ.தி.மு.க ஆட்சியில் பயிர்க்கடன் தள்ளுபடியில் ரூ.516 கோடி முறைகேடு நடைபெற்றிருப்பதாக கூட்டுறவுத்துறைத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

கூட்டுறவுத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது கேள்விக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “பயிர்க்கடன் தள்ளுபடியை பொறுத்தவரை 81% பேருக்கு ரசீது வழங்கப்படுள்ளது. சாகுபடி பரப்பளவு, பயிருக்கு வழங்க வேண்டிய கடனை விட பல மடங்கு உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் ரூ.516 கோடி முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

சேலம் மற்றும் நாமக்கல்லில் மட்டும் 503 கோடி ரூபாய் முறைகேடாக வழங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடன் தள்ளுபடியை எதிர்நோக்கி ஒரு நாளைக்கு முன்பாகவே திட்டம் போட்டு தள்ளுபடி செய்துள்ளனர். பயிர்க்கடன் வழங்கும்போது கூட்டுறவு சங்கங்கள் ஏனைய வசூலையும் கடனாக கொடுத்து விதிமீறலில் ஈடுபட்டுள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் 6 தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கியில் 66 விவசாயிகளுக்கு பிப்ரவரி 21ஆம் தேதி 54.50 லட்சம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. சேலத்தில் 12 தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கியில் 2698 உறுப்பினர்களுக்கு ரூ.4.96 கோடி மட்டுமே வழங்க வேண்டும் என்ற நிலையில் ரூ.16.70 கோடி வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் ஊரான கோச்சடையில் கூட அதிகமாக பணம் வழங்கப்பட்டுள்ளது. 5 பவுன் வரை நகைக்கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 13.91 லட்சம் பேர் பல வங்கிகளில் ரூ.5,896 கோடி கடன் பெற்றுள்ளனர்.

இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. தகுதியுள்ள நபர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்வதற்கான முடிவை முதலமைச்சர் எடுப்பார்.” எனத் தெரிவித்தார்.

Also Read: நாட்டிலேயே வட்டியில்லா விவசாயக் கடன் கொடுத்த பிதாமகன் தலைவர் கலைஞர் - அமைச்சர் ஐ.பெரியசாமி பெருமிதம்!