Tamilnadu

Test Drive செய்வதாக கூறி புல்லட்டை திருடிச் சென்ற வாலிபர்.. போலிஸில் சிக்கியது எப்படி?

சென்னை, சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் விக்டர். இவர் தன்னுடைய புல்லட் வாகனத்தை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார். இதற்காக ஆன்லைனில் விளம்பரம் செய்திருந்தார்.

இதையடுத்து, விக்டர் வீட்டிற்கு வாலிபர் ஒருவர் வந்துள்ளார். உங்கள் விளம்பரத்தைப் பார்த்தேன். புல்லட் வாகனத்தை வாங்க விரும்புகிறேன். வாகனத்தை ஒரு முறை ஓட்டிப் பார்க்கவேண்டும் எனக் கூறியுள்ளார்.

இதற்கு விக்டரும் சம்மதம் தெரிவித்து, வாகனத்திற்கான சாவியை அவரிடம் கொடுத்துள்ளார். பின்னர் அந்த நபர் புல்லட்டை ஓட்டிக்கொண்டு சென்றார். நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த விக்டர், அவர் கொடுத்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் பதில் அளிக்கவில்லை. இதனால் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விக்டர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுத்தார்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலிஸார், விக்டர் வீட்டின் அருகே இருக்கும் சி.சி.டி.வி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். பின்னர், புல்லட்டை திருடிச் சென்ற நபர் நொளம்பூரில் பதுங்கியிருப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

பின்னர், அங்கு சென்ற போலிஸார் அந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த நிகில் என்பதும், இவர் மீது ஏற்கனவே பைக் திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

பிறகு அவரிடமிருந்த புல்லட்டை மீட்டு போலிஸார் விக்டரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து நிகிலை கைது செய்த போலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Also Read: செந்தில் காமெடியை மிஞ்சிய டிக்டாக் பிரபலம் : தற்கொலை வீடியோ வெளியிட்டு குறட்டை விட்டுத் தூங்கிய கூத்து!