Tamilnadu

“செப்.1ம் தேதி பள்ளிகள் தொடங்கப்படும்; தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது” : அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

திருச்சி மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் சார்பாக மாவட்ட மைய நூலகத்தில் நூலகர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “மதுரையில் தொடர்ந்து திருச்சியிலும் கலைஞர் நினைவு நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இப்பொழுது வரை செப்டம்பர் 1ஆம் தேதி 9,10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க வேண்டும் என்பதில் தான் அரசு உறுதியாக இருக்கிறது.

ஆலோசனைக்குழு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் படி தயார் நிலையில் இருக்கவேண்டும் என அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தி, மாவட்ட ஆட்சித்தலைவரின் ஒத்துழைப்புடன் தயார் நிலையில் இருக்க தெரிவித்துள்ளோம். மேலும் தடுப்பூசி போடாத ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே செப்டம்பர் 1ஆம் தேதி 9,10, 11, 12 ஆம் வகுப்புகள் தொடங்கப்படும். அதற்கான தயார் நிலையில் உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற கேள்விக்கு. பதில் அளித்த அமைச்சர், ஏற்கனவே பணி நிரவல் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஏற்கனவே ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் குறித்த ஆலோசனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே இந்த பணிமாறுதல் அனைத்தும் நிறைவு பெற்ற பிறகு, முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கூடுதல் ஆசிரியர் நியமனம் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் ஏறத்தாழ 37,579 க்கு மேல் அரசு பள்ளி உள்ளது. ஒவ்வொரு பள்ளிகளிலும் கூடுதலான மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர். ஒரு சில பள்ளிகளில் 150 மாணவர்கள் படித்த பள்ளிகளில் 300 பேர் என சேர்க்கை உயர்ந்திருக்கிறது. அதற்கேற்றார்போல் பள்ளி கட்டமைப்பு வசதி, ஆசிரியர் தேவை குறித்து கவனம் செலுத்த வேண்டியுள்ளது. சம்பத்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலரிடம் விபரங்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.” எனத் தெவித்துள்ளார்.

Also Read: வறுமையின் அடையாளமா அரசுப்பள்ளி? பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியது என்ன?