Tamilnadu

கொரோனா விதிகளை மீறியதால் திருமண ஜோடிகளுக்கு இடையே நடந்த கைகலப்பு: குன்றத்தூர் கோவிலில் நடந்தது என்ன?

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்ததைத் தொடர்ந்து கோவில்களில் திருமணம் நடைபெறுவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படியே கோவில்களில் திருமண நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஆடிமுடிந்து நேற்று முதல் முகூர்த்த நாள் என்பதால், காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் முருகன் கோவிலில் 35 ஜோடிகளுக்குத் திருமணம் நடைபெற்றது. திருமண விழாவில் கலந்து கொள்ளும் உறவினர்களுக்கு ஆறு பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் திருமணத்திற்கு முன்பதிவு செய்யாத திருமண ஜோடிகள் கோவிலுக்கு வந்ததாலும், இவர்களுடன் உறவினர்களும் அதிக அளவில் கூடியதால், ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. மேலும் உள்ளே நுழைய முயன்றவர்களைத் தடுத்து நிறுத்துவதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக கைகலப்பு ஏற்பட்டது.

பின்னர் கோவிலுக்கு வந்த போலிஸார் அனுமதியில்லாமல் கூடியவர்களைக் கோவிலிலிருந்து வெளியேற்றினர். பிறகு சிறிது நேரத்தில் இரு தரப்பினரும் தங்களுக்குள் சமாதானம் ஆகி, திருமணத்தை முடித்துக்கொண்டி அங்கிருந்து சென்றனர். கொரோனா ஊரடங்கை மீறி பொதுமக்கள் இதுபோன்று கூடுவதைத் தவிர்க்கக் காவல் துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Also Read: மக்களே உஷார்.. கலெக்டர் போல் செல்போனில் பேசி பணம் மோசடி செய்த முயற்சி - சைபர் கிரைம் போலிஸார் எச்சரிக்கை!