Tamilnadu

“2.38 லட்சம் டன் நிலக்கரி மாயம்; அதிமுக ஆட்சியில் பயங்கர முறைகேடு”: மாட்டுவாரா முன்னாள் அமைச்சர் தங்கமணி?

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் வடசென்னை அனல்மின் நிலையத்தில் 85 கோடி ரூபாய் மதிப்பிலான 2 லட்சத்து 38 ஆயிரம் டன் நிலக்கரி மாயமானதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையத்தில் நிலக்கரி சேமிப்பு கிடங்கில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு மேற்கொண்டார்.

வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து கப்பல் மூலம் கொண்டுவரப்படும் நிலக்கரி கன்வேயர் பெல்ட் மூலம் நேரடியாக வடசென்னை அனல் மின் நிலையத்தில் உள்ள நிலக்கரி சேமிப்பு கிடங்கில் சேமிக்கப்பட்டு மின் தயாரிப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தபின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செந்தில்பாலாஜி, “கடந்த அ.தி.மு.க ஆட்சியில் வடசென்னை அனல்மின் நிலையத்தில் 85 கோடி ரூபாய் மதிப்பிலான 2 லட்சத்து 38 ஆயிரம் டன் நிலக்கரி மாயமாகி உள்ளது.

அனல் மின் நிலைய பதிவேட்டில் இருக்கிறது; ஆனால் இருப்பில் காணவில்லை. அ.தி.மு.க ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டால் ஒரு லட்சத்து 59 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்ந முறைகேடு குறித்து மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

மேலும், “நிதிநிலை அறிக்கையில் மின் பற்றாக்குறை எவ்வளவு அடுத்த 10 ஆண்டுகளில் சொந்த உற்பத்தியின் மின்சார அளவு ஆகியவை பற்றி வெளிப்படையாகக் கூறி வெளிப்படையான நிர்வாகத்தை தற்போதைய அரசு முன்னெடுத்துள்ளது. வடசென்னை அனல் மின் நிலையத்தில் கடந்த 7 ஆண்டுகளுக்கு பிறகு தொடர்ச்சியான மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.” எனத் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராசன் மற்றும் மின்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Also Read: வறுமையின் அடையாளமா அரசுப்பள்ளி? பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியது என்ன?