Tamilnadu
வேலுமணியுடன் கூட்டு கொள்ளை; ஒப்பந்ததாரர்களை வேட்டையாடும் லஞ்ச ஒழிப்புத்துறை; சிக்கிய அதிமுக பிரமுகர்!
அதிமுக பிரமுகரும் மாநகராட்சி ஒப்பந்ததாரருமான வெற்றிவேல் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விடிய விடிய நடைபெற்ற சோதனையின் முடிவில் 11.80 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு சொந்தமான 60க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். குறிப்பாக சென்னை மாநகராட்சி மற்றும் கோவை முனிசிபல் கார்ப்பரேஷன் ஆகியவற்றில் 811 கோடி ரூபாய் டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்து சோதனை நடத்தியது.
இந்த சோதனையின்போது பதிமூன்றரை லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணமும் 2 கோடி ரூபாய் வைப்புத் தொகை தொடர்பான ஆவணங்களும் மாநகராட்சி ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் சிக்கின. மேலும் எஸ்.பி.வேலுமணி தொடர்பான வங்கி கணக்குகள் வங்கி லாக்கர்கள் தொடர்பாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில், குறிப்பாக 2014 முதல் 18ம் ஆண்டு வரை நடந்த சென்னை மாநகராட்சி மற்றும் கோவை முனிசிபல் கார்ப்பரேஷன் தொடர்பான டெண்டர்களில் விதிகளை மீறி ஒப்பந்தம் செய்த அரசு ஒப்பந்ததாரர்களின் பட்டியலை லஞ்ச ஒழிப்புத் துறை தயாரித்துள்ளது. சோதனையின்போது கிடைக்கப்பெற்ற மாநகராட்சி ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் மூலம் இந்தப் பட்டியலைத் தயாரித்து உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதனடிப்படையில் சென்னை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த அதிமுக பிரமுகரும் மாநகராட்சி ஒப்பந்ததாரருமான வெற்றிவேல் என்பவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று முதல் அதிரடியாக சோதனை நடத்தினர். விடிய விடிய நடைபெற்ற சோதனை இன்று காலை 6.30 மணிக்கு நிறைவடைந்தது. சோதனையின் முடிவில் 11.80 லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
அதிமுகவின் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் துணைச் செயலாளராக வெற்றிவேல் இருந்து வருகிறார். மாநகராட்சி டெண்டரில் எத்தனை ஒப்பந்தங்கள் வெற்றிவேல் எடுத்துள்ளார் அதில் விதிகளை மீறி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளாரா உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. முக்கியமாக 346 கோடி ரூபாய் டெண்டரில் வெற்றிவேலின் ஒப்பந்தங்கள் தொடர்பான ஆவணங்களை வைத்து விசாரணை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வெற்றிவேல் சாதாரண கண்டக்டராக இருந்தபோது முதல் முன்னால் அமைச்சர் வளர்மதியின் மகன் மூவேந்தன் என்பவருடன் நெருங்கி பழகி வந்ததும் அதன் மூலம் முன்னாள் அமைச்சர் வளர்மதி மற்றும் தி.நகர் சத்யா ஆகியோருடன் தொடர்பு ஏற்படுத்தி கொண்டு பல்வேறு ஒப்பந்தங்களை எடுத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Also Read
-
Delimitation விவகாரம் : அமித் ஷாவைப் பார்த்து பயமா? – முதலமைச்சர் விஜய்க்கு தயாநிதி மாறன் MP கேள்வி!
-
ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? : அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எ.வ.வேலு!
-
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம் : த.வெ.க அரசுக்கு கோ.வி.செழியன் கேள்வி சரமாரி கேள்வி!
-
“ திமுக ஆட்சியில் நிதியுதவி கிடைத்த மாணவனுக்கு தவெக ஆட்சியில் கிடைக்காதது ஏன்?” : இ.பரந்தாமன் கேள்வி!
-
சிவகாசி பட்டாசு ஆலை ஆய்வுகள் : பேரவையில் தங்கம் தென்னரசு - அமைச்சர் கீர்த்தனா இடையே காரசார விவாதம்!