Tamilnadu

”இன்னும் 36 மாதங்களுக்குள் தோப்பூரில் எய்ம்ஸ் அமைத்திடுக” - ஒன்றிய அரசுக்கு மதுரை ஐகோர்ட் அதிரடி ஆணை!

மதுரையை சேர்ந்த ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்  பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், " மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒன்றிய அரசு கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டியது. ஆனால் மருத்துவமனை கட்டடம் கட்டும் பணிகளும் நடைபெறவில்லை.  மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தால் தென்தமிழகம் மற்றும் கேரளா மாநில மக்கள் பெரும் பயன் அடைவார்கள்.

மருத்துவ படிப்பிற்கான சேர்க்கையில் மாணவர்களுக்கு கூடுதல் ஒதுக்கீடு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. மேலும் கொரோனா தொற்று காரணமாக பல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அளவுக்கு அதிகமாக பணம் வசூல் செய்யும் சூழலில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்திருந்தால் ஒரே நேரத்தில் பல ஆயிரம் மக்கள் சிகிச்சை பெற்று பயன்பெற்றிருப்பார்கள்.

ஆனால் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு பல வருடங்களாகியும் எவ்வித பணிகளும் நடைபெறவில்லை. ஆகவே, மதுரை தோப்பூரில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக நிதியை ஒதுக்கி, பணியை துரிதப்படுத்த உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வு, வழக்கினை தீர்ப்பிற்காக ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில் இன்று நீதிபதிகள், " தமிழகத்தோடு எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என அறிவிக்கப்பட்ட பிற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் ஏறத்தாழ முடியும் நிலையில் உள்ளன. தமிழகத்தில் பணிகள் அவ்வளவு துரிதமாக நடைபெற்றதாக தெரியவில்லை.

மனுதாரர் ஒவ்வொரு நகர்வுக்கும் நீதிமன்றத்தை நாடியே உத்தரவு பெற்றுள்ளார். எய்ம்ஸ் கட்டுமான பணிகளை துரிதப்படுத்த ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகவே, இந்த உத்தரவு கிடைக்கப்பெற்ற 36 மாதங்களுக்குள்ளாக மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என நீதிமன்றம் எதிர்பார்க்கிறது என குறிப்பிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Also Read: “ஒரே திகிலா இருக்கேப்பா...” : தேர்தல் ஆணையத்துக்கு விநோத கோரிக்கையை முன்வைத்த பா.ஜ.க அமைச்சர்!