Tamilnadu

“திருமணமான ஒரே வருடத்தில் காதல் மனைவியை குத்திக்கொன்ற கணவன்” : விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவன் பாலமுருகனும், சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த அணு என்ற இளம்பெண்ணும் காதலித்து கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு உள்ளனர். இவர்களுக்கு 9 மாத பெண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில், பாலமுருகனுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது என்பது அணுவுக்கு தெரியவந்துள்ளது. மேலும் பாலமுருகன் சரிவர வேலைக்கு செல்லாமல் சுற்றித்திரிந்து வந்துள்ளார். இதன் காரணமாக குடும்பம் நடத்த முடியாமல் அணுவுக்கும் பால முருகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில், பாலமுருகனை பிரிந்து அணு, தனது தாய் வீட்டிற்கு வந்துவிட்டார்.

இந்நிலையில், அணு, தனக்கும், தன் குழந்தைக்கும், பிழைக்க வருமானம் வேண்டி வேலை தேடிய நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை கிடைத்துள்ளது. வேலை செய்வதற்காக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கைக்குழந்தையை தாயின் வீட்டில் விட்டுவிட்டு சொந்த ஊரிலிருந்து கிளம்பி வந்துள்ளார்.

தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தின் சார்பில் காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் அருகே புளியம்பாக்கத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் செயல்பட்டுவரும் தொழிற்சாலையின் தங்கும் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இதை அறிந்து கொண்ட கணவன் பாலமுருகன் வாலாஜாபாத் அருகே புளியம்பாக்கத்தில் உள்ள தங்கும் விடுதிக்கு வந்து மனைவியை வெளியே அழைத்து வந்து சமாதானம் செய்ய முயன்றுள்ளார்.

அப்போது கணவன், மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென அனுவின் கழுத்தை சரமாரியாக குத்தி அறுத்து விட்டு தானும் மனைவியை அறுத்த கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார்.

கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அணு பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து உடனடியாக தங்கும் விடுதி காவலர்கள் போலிஸாக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் வாலாஜாபாத் போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிய பாலமுருகனை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட அணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து வாலாஜாபாத் போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: “தமிழ் சமூகத்தின் உணவியல், பண்பாட்டு மரபியல் வரலாறாக வேளாண் அறிக்கை இருந்தது” : ‘முரசொலி’ புகழாரம் !