Tamilnadu

“மகன் தலையில் கல்லைப் போட்டுக் கொன்றது ஏன்?” : தாய் அதிர்ச்சி வாக்குமூலம் - ஆம்பூரில் பயங்கரம்!

திருப்பத்தூர் மாவட்டம், பெரியாங்குப்பம் ரசாக்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவரது கணவர் புகழேந்தி. இந்த தம்பதிகளுக்கு மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பே மனைவியை விட்டு புகழேந்தி பிரிந்து சென்றுவிட்டார். இதையடுத்து ராஜேஸ்வரி தனது மூன்று பிள்ளைகளுடன் தனியாக வாழ்ந்து வந்தார். இதையடுத்து இரண்டாவது மகன் சிவக்குமாருக்கு, கௌரி என்ற பெண்ணை திருமணம் செய்துவைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சிவகுமாருக்கும் மனைவி கௌரிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கௌரி தனது தாய் வீட்டுக்குச் சென்று அங்கேயே இருந்துள்ளார். பிறகு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ராஜேஸ்வரி, கௌரியைச் சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு பெரியங்குப்பம் பகுதியில் உள்ள தனது வீட்டின் வெளியே உள்ள திண்ணையில் சிவக்குமார் படுத்து தூங்கியுள்ளார். அப்போது அவரின் தலையில் மர்ம நபர்கள் பாறாங்கல்லைப் போட்டு கொலை செய்துள்ளனர்.

இது பற்றி அறிந்த போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து சிவக்குமார் உடலைக் கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் சிவக்குமார் சடலத்தின் அருகே இருந்த கல் மீது சாணத்தை ஊற்றியிருப்பது போலிஸாருக்கு சந்தேகத்தை எழுப்பியது.

பின்னர், மனைவி மற்றும் சிவக்குமாரின் தாய் ஆகியோரிடம் போலிஸார் விசாரணை நடத்தினர். அப்போது தாய் ராஜேஸ்வரி கூறியதைக் கேட்டு போலிஸார் அதிர்ச்சியடைந்தனர். சம்பவத்தன்று சிவக்குமார் குடித்துவிட்டு மனைவி மற்றும் தாயிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அதே நேரம் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்தி விடுவேன் எனவும் சிவக்குமார் மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன ராஜேஸ்வரியும் கௌரியும் அருகில் வசிப்பவர்கள் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

பின்னர் சிவக்குமார் குடிபோதையில் திண்ணையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அங்கு சென்ற அவரது தாய், தனது மகனின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதையடுத்து போலிஸார் ராஜேஸ்வரியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்தக் கொலை சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: பொள்ளாச்சி பாலியல் கொடூரம்: மேலும் ஒரு அ.தி.மு.க நிர்வாகி கைது... அடுத்தடுத்து சிக்கும் குற்றவாளிகள்!