Tamilnadu

“100 நாட்களாக நல்லாட்சி நடத்துகிறது தி.மு.க” : ஒப்புக்கொண்ட பா.ஜ.க தலைவர் அண்ணாமலை!

100 நாட்களாக நல்ல முறையில் ஆட்சி நடக்கிறது என தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்’ திட்டம் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் 5 தலித்கள் உள்பட வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த 58 பேருக்கு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்த திட்டத்தை அரசியல் தலைவர்கள் பலர் வரவேற்றுள்ளனர். தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் இந்தத் திட்டத்துக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சி அமைத்து இன்று 100 நாட்கள் நிறைவுபெறும் நிலையில், சிறப்பான திட்டங்களை நிறைவேற்றியிருக்கும் தி.மு.க அரசுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு பட்ஜெட் மற்றும் தி.மு.கவின் 100 நாள் ஆட்சி குறித்துப் பேசியுள்ள தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “நேர்மையான அதிகாரிகளை நியமித்து 100 நாட்களாக நல்லமுறையில் ஆட்சி நடத்துகிறது தி.மு.க.

தி.மு.க அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை வரவேற்கிறோம். ஆகம விதிப்படி நடந்தால் நல்லது” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: "தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் இன்று ஆறியது".. 51 வருட ஏக்கத்தை தீர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!