Tamilnadu

“நூறாண்டுக்கு பெயர் நிலைக்கும் சாதனைகளை செய்வோம்; இது என் அரசல்ல,உங்களின் அரசு”: மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சி அமைத்து 100 நாட்கள் நிறைவுபெற்றதை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைகிறது என்றால் அது ஒரு கட்சியின் ஆட்சியாக இல்லாமல் ஓர் இனத்தின் ஆட்சியாகத்தான் எப்போதும் இருந்திருக்கிறது. இப்போதும் அப்படித்தான் அமைந்திருக்கிறது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்ற திராவிட முன்னேற்றக் கழகம் அமைத்திருக்கும் ஆட்சி என்பது தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஆறாவது முறை அடைந்த மாபெரும் வெற்றி ஆகும்.

ஒவ்வொரு முறை கழகம் வெற்றி பெறும்போதும் தமிழ் வெற்றி பெறுகிறது. தமிழர் வெற்றி பெறுகின்றனர். தமிழ்நாடு வெற்றி பெறுகிறது. தமிழ்நாட்டை உள்ளடக்கிய இந்திய ஒன்றியத்தில் மக்களாட்சி மாண்புக்கு வெற்றி கிடைக்கிறது.

உடன்பிறப்பே என்ற ஒற்றைச் சொல்லால் அனைவரது உள்ளங்களையும் வென்றெடுத்த முத்தமிழறிஞர் கலைஞரின் கனவான கழக ஆட்சி கடந்த மே 7-ம் நாள் அமைந்தது. அவரால் வார்ப்பிக்கப்பட்ட நானும், அவரால் வளர்த்தெடுக்கப்பட்ட அமைச்சரவைச் சகாக்களும் இணைந்து அமைத்த ஆட்சியானது இன்றுடன் 100-வது நாளை எட்டுகிறது.

இன்று மிக முக்கியமான நாள். 1950-ம் ஆண்டு சமூகநீதிக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்தபோது ஆகஸ்ட் 14-ம் நாளைத்தான் வகுப்புரிமை நாளாக அறிவித்து தந்தை பெரியார் போராட்டம் தொடங்கினார். அந்தப் போராட்டத்தின் மூலமாகத்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் முதன் முதலாகத் திருத்தப்பட்டது. அத்தகைய முக்கியமான நாள் தான் இந்த ஆகஸ்ட் 14. அத்தகைய சிறப்பு வாய்ந்த நாளில்தான் நமது அரசு நூறாவது நாளை எட்டுகிறது.

ஐந்தாண்டு கால ஆட்சியில் 100 நாட்கள் என்பது குறைவானது தான். ஆனால், இந்த 100 நாட்களில் கழக அரசு செய்துள்ள சாதனைகள் நிறைவானது என்பதை எண்ணி மகிழ்கிறேன்.

* கொரோனா என்ற பெருந்தொற்றில் இருந்து மக்களைக் காத்தல்.

* எந்த அலையையும் எதிர்கொள்ளும் வல்லமை கொண்டதாக மக்கள் நல்வாழ்வுத் துறையை மாற்றுதல்.

* மகளிருக்கு அரசு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம்.

* பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு.

* பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு.

* கொரோனா நிவாரண நிதியாக 2 கோடியே 10 லட்சம் குடும்பங்களுக்கு 4 ஆயிரம் ரூபாய்.

* இந்தியாவின் வேறு எந்த மாநில அரசும் வழங்காத 9 ஆயிரம் கோடி மதிப்பிலான 14 மளிகைப் பொருட்கள்.

* குடும்பத்தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்குவதற்கான பயனாளிகள் தேர்வு.

* நமக்கு நாமே, அண்ணா மறுமலர்ச்சித் திட்டங்களுக்கு புத்துயிர்ப்பு.

* கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம்.

என முத்தான பத்து திட்டத்தை வழங்கி இருக்கிறோம். 120-க்கும் மேற்பட்ட முக்கியமான அறிவிப்புகள், முன்னெடுப்புகள் செய்யப்பட்டு இருந்தாலும் அதில் ஏழை எளிய மக்களின் மேம்பாட்டுக்கான முதன்மையான திட்டங்களை மட்டுமே இங்கு பட்டியலிட்டுள்ளேன்.

இந்த 100 நாட்களில் கழக அரசு செய்த சாதனைகளின் மூலமாக, திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களித்தவர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள். வாக்களிக்கத் தவறியவர்கள், ‘இவர்களுக்கு வாக்களிக்காமல் போய் விட்டோமே’ என்று வருந்துகிறார்கள். இதுதான் இந்த ஆட்சியின் மகத்தான மாபெரும் சாதனையாகும். ஏழை, எளிய மக்களின் மனம் குளிரும் அரசாக என்றும் செயல்படுவோம்.

இன்றைய தினம், ஆலயங்களில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின்படி 24 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி இருக்கிறேன். தகுதிபடைத்த அர்ச்சகர்கள், ஆலயப் பணியில் ஈடுபட அவர்களது சாதி தடையாக இருக்கக் கூடாது என்பது திராவிட இயக்கத்தின் மனித உரிமைக் குரல் ஆகும்.

அரசியலையும் மக்கள் பணியையும் தொழிலாகக் கருதுபவனல்ல நான். அதை வாழ்க்கையாக, மூச்சாகக் கருதுபவன். 23 வயதில் இந்திய நாட்டின் ஜனநாயகம் காக்கப்பட நெருக்கடி நிலையை எதிர்த்ததால் சிறை வைக்கப்பட்டவன் நான். ‘ஸ்டாலின் அரசியலுக்கு அழைத்து வரப்படவில்லை, இழுத்து வரப்பட்டவன்’ என்று ஒரு வரியில் எனது அரசியல் வாழ்க்கையை முத்தமிழறிஞர் கலைஞர் சொன்னார்.

இன்று அதை நினைத்துப் பார்க்கிறேன். நாளைய தினம், பழம்பெருமை வாய்ந்த சென்னைக் கோட்டை கொத்தளத்தில் இந்தியத் திருநாட்டின் எழுச்சிமிகு சின்னமான தேசியக் கொடியை ஏற்றி வைக்க இருக்கிறேன். அதுவும் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளைக் கொண்டாடும் வரலாற்றுச் சிறப்புமிகு தருணத்தில் ஏற்றப்படும் புகழ்க் கொடி அது.

மக்களுக்காக உண்மையாக உழைத்த உங்களில் ஒருவனான எனக்குக் கிடைக்கும் தனிப்பட்ட மரியாதை அல்ல இது. கழகத்தின் லட்சோப லட்சம் உடன்பிறப்புகளின் எண்ணமும், கழகத்துக்காக வாக்களித்த கோடிக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்பும் இணைந்து என்னை இயக்கிக்கொண்டு இருக்கிறது. அதுதான் என்னைச் செயல்படவைக்கிறது. அதுதான் என்னை உழைக்க வைக்கிறது.

நாம் கடக்க வேண்டிய தூரம் அதிகம். 100 நாட்கள் அளித்த உற்சாகத்தால் நூற்றாண்டுக்குப் பெயர் நிலைக்கும் சாதனைகளைச் செய்வோம். சாதனைகளால் சொல்வோம். இது என் அரசல்ல, உங்களில் ஒருவனின் அரசு, உங்களின் அரசு." இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Also Read: 100 நாளில் வரலாறு காணாத சாதனை புரிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்; அறநிலையத்துறையில் நிகழ்ந்த மாற்றங்கள் என்ன?