Tamilnadu

“அதிமுக ஆட்சியின் நிதி சீர்கேட்டை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்”: பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பேச்சு!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல் முறையாக காகிதமில்லா இ- பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராகன் இன்று தாக்கல் செய்தார்.

“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு” - என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது பட்ஜெட் உரையைத் தொடங்கினார். பின்னர் பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியவை பின்வருமாறு:

“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு திறமையாக வெளிப்படையாக செயல்படும் என நம்பி மக்கள் வாக்களித்துள்ளனர். கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது எண்ணற்ற திட்டங்களை தீட்டித் தந்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலுடன் நிதிநிலை அறிக்கை தயாராகி உள்ளது. தலைநிமிரும் தொலைநோக்கு திட்டங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. வரும் 6 மாதங்களுக்கான நிதிநிலை அறிக்கையே இன்று தாக்கல் செய்யப்படுகிறது. முதலமைச்சர் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளோம். தமிழ்நாடு நிதி நிலையை சீரமைக்கும் வகையில் பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 வருட அ.தி.மு.க அரசின் நிதி நிர்வாக சீர்கேட்டை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த ஆண்டு தி.மு.க அரசின் முழுமையான பட்ஜெட்டிற்கு தற்போதைய பட்ஜெட் அடித்தளமாக இருக்கும்.

வெளிப்படைத்தன்மை, சமூக ஈடுபாடு, வல்லுநர்கள் கருத்து என நான்கு முக்கிய கூறுகளுடன் உறுதியான நடவடிக்கை அடிப்படையில் தமிழ்நாடு அரசு செயல்படும்.

முதலமைச்சர் அளித்த வாக்குறிதிகளுக்கு முன்னுரிமை அளித்து படிப்படியாக நிறைவேற்றப்படும். அதன் ஒருபகுதியாக, பதிவியேற்ற முதல் நாளிலேயே 5 வாக்குறுதிகளை நிறைவேற்றி முத்திரை பதித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது, தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், கொரோனா நிவாரணமாக ரூ.4,000 வழங்கப்பட்டது. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 2,29,216 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளன. வாக்குறுதிகள் அளிக்காமலேயே கொரோனா நிவாரணமாக உணவுப் பொருள் தொகுப்பு வழங்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: பட்ஜெட் தாக்கல்: தமிழ் வளர்ச்சித்துறைக்கு ரூ.80 கோடி.. தொல்லியல் துறைக்கு ரூ.29 கோடி ஒதுக்கீடு! #TNBudget