Tamilnadu

பட்ஜெட் தாக்கல்: தமிழ் வளர்ச்சித்துறைக்கு ரூ.80 கோடி.. தொல்லியல் துறைக்கு ரூ.29 கோடி ஒதுக்கீடு! #TNBudget

2021 - 2022ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட் இதுவாகும்.

தமிழ்நாட்டில் முதல் முறையாக காகிதம் இல்லா நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, அனைத்து எம்.எல்.ஏ.,க்கள் மேஜையிலும் கணினி திரை பொருத்தப்பட்டுள்ளது.

எம்.எல்.ஏக்களுக்கு வழங்கப்பட்டுள்ள டேப்லெட் கருவி மூலம் பட்ஜெட் தொகுப்பை பார்க்கும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பாக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

நிதிநிலையை தாக்கல் செய்து நிதியமைச்சர் பேசுகையில்,”அடுத்த ஆறு மாதங்களுக்குப் பின் தாக்கல் செய்யவுள்ள 2022-2023-ம் ஆண்டிற்கான முழு வரவு செலவுத் திட்டத்திற்கு வலுவான அடித்தளம் அமைப்பதே இந்த திருத்த வரவு செலவுத் திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

ஒரே ஆண்டில் செய்து முடிக்க இயலாத அளவிற்கு இப்பணி மிகக் கடினமாக உள்ளது. இதற்கு குறைந்தபட்சம் 2 - 3 ஆண்டுகள் வரையிலும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும். எந்த சிக்கலையும் சரி செய்வதற்கான முதல் படி அதை அடையாளம் கண்டு அதன் ஆழத்தினை புரிந்து கொள்வதாகும். தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவோம்.” என்றார்.

தொடர்ந்து பட்ஜெட் உரையை வாசித்த நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், “கீழடி, சிவகளை, கொற்கை, ஆதிச்சநல்லூர் போன்ற தொல்லியல் ஆய்வு நடக்கும் இடங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு இந்த பணிகளுக்கு ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

கீழடியில் திறந்தவெளி கண்காட்சி அமைக்கப்படும். கொற்கை மற்றும் அழகன்குளம் பகுதியில் ஆழ்கடல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ. 80 கோடியும், தொல்லியல் துறைக்கு ரூ. 29 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படும். அனைத்து துறைகளிலும் தமிழை ஆட்சி மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆண்டுதோறும் ஜூன் 3ஆம் தேதி கலைஞர் செம்மொழி தமிழ் விருது ரூ. 10 லட்சம் பரிசுடன் வழங்கப்படும்.” என அறிவித்தார்.