Tamilnadu

மோசமான நிர்வாகத்தை நடத்திவிட்டு நாடகமாடுவதா? அதிமுகவை கடுமையாக சாடிய அமைச்சர் ராஜகண்ணப்பன்!

நிதி சுமையில் இருந்தாலும் பேருந்துக் கட்டணங்களை உயர்த்தும் எண்ணம் தற்போது இல்லை. தேவையற்ற செலவுகளை குறைத்து வருகிறோம் என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.

சென்னை மேற்கு சைதாப்பேட்டையில் புதிய வழித்தடங்கள் மற்றும் நிறுத்தப்பட்ட வழித்தடங்களில், 23 மாநகரப் பேருந்துகள் இயக்கத்தினை, போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். அப்போது புதிய வழித்தடத்தில் அமைச்சர்கள் இருவரும் பொதுமக்களுடன் பேருந்தில் பயணம் மேற்கொண்டனர்.

அப்போது மேடையில் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை தொடர்பாக பேசும் போது, உப்பு திண்ணவர் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும். தவறு செய்தால் தண்டனை நிச்சயம். இதற்கு மற்றவர்களை குறைத்து பேச கூடாது. பொதுமக்களின் நன்மையை கருதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார். அதிமுகவினர் கடந்த ஆட்சி காலத்தில், மோசமான நிர்வாகத்தை நடத்திவிட்டு நல்லவர்கள் போல் நடிக்கிறார்கள் என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜ கண்ணப்பன், தமிழகத்தில் போக்குவரத்துத்துறை நஷ்டத்தில் சென்றாலும், மக்கள் நலனில் அக்கறையோடு செயல்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் நிர்வாக சீர்கேடு காரணமாக கடன் சுமை ஏற்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை புது பொலிவு பெரும். பழைய பேருந்துகள் அகற்றப்பட்டு, ஜெர்மனி நாட்டுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதன்படி விரைவில் 2500 புதிய பேருந்துகள் வாங்கப்படும்.

போக்குவரத்துத்துறை நிதி சுமையில் இருந்த போதும் பேருந்துக் கட்டணங்களை உயர்த்தும் எண்ணம் தற்போது இல்லை. தேவையற்ற செலவுகளை குறைத்து வருகிறோம். தமிழகத்தில் 40% பெண்கள் பயன்படுவர் என்ற அடிப்படையில் இலவச பேருந்து பயணம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் தற்பொழுது 61% பெண்களுக்கு இந்த திட்டம் பயன்படுகிறது. இதுவரை 9.20 லட்சம் மகளிர் பயனடைந்துள்ளனர்.

நாளொன்றுக்கு 30 லட்சம் மகளிர் பயணடைந்து வருகின்றனர். இதனால் கூடுதலாக 150 கோடி ஒதுக்க வேண்டியுள்ளது என தெரிவித்தார்.

Also Read: அ.தி.மு.க ஆட்சியின் இருண்ட காலத்தை அம்பலப்படுத்திய வெள்ளை அறிக்கை.. பழனிசாமி அண்ட் கோ செய்தது என்ன ?