Tamilnadu

‘பப்ஜி’ தகராறில் இளைஞர் குத்திக் கொலை : திருவாரூரில் பயங்கரம்!

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே சாலையோரத்தில் வாலிபர் சடலம் ஒன்று கிடப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலிஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் உயிரிழந்த வாலிபர் நாச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த இஸ்மத் என தெரியவந்தது. மேலும், பப்ஜி விளையாடுவதில் நண்பர் ஒருவருடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இஸ்மத் கொலை செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இஸ்மத்திற்கும், அவரது நண்பர் வாஜித்துக்கும் பப்ஜி விளையாட்டின் போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இவர்களுக்கிடையே விரோதம் இருந்துள்ளது. இதையடுத்து வாஜித் சமாதானம் பேசலாம் எனக் கூறி இஸ்மத்தை அழைத்துள்ளார்.

இந்நிலையில், மன்னார்குடி ஆர்.பி.சிவம் நகர் அருகே ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் இஸ்மத், வாஜித் மற்றும் வாஜித்தின் நண்பர்கள் தீன்ஹனீஸ், மர்ரூஜ், அக்பர்பாஷா ஆகியோர் சந்தித்துள்ளனர். அப்போது இஸ்மத்துக்கும், வாஜித்திற்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, வாஜித்தின் நண்பர்கள் இஸ்மத்தை குத்திக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவானது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலிஸார் தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளைத் தேடி வருகிறனர்.

பப்ஜி விளையாட்டில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: போலி பத்திரம் மூலம் பொது பாதையை அபகரித்த BJP நிர்வாகி; முதல்வர் தனிப்பிரிவில் புகாரளித்ததும் நடவடிக்கை!