Tamilnadu

வேளாண் துறைக்கென தனி பட்ஜெட்; விவசாயிகள் தன்னிறைவை அடைய இது உதவும் - அமைச்சர் MRK பன்னீர்செல்வம் உறுதி!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ள வேளாண் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கை( 2021-2022) தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள வேளாண் இயக்குநர் அலுவலகத்தில் தொடங்கியது.

வேளாண் துறை சிறப்பு செயலாளர் ஆபிரகாம், மாநில வளர்ச்சிக் கொள்கை குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் குமார், மாநில வளர்ச்சி கொள்கைக்குழு உறுப்பினரும் மன்னார்குடி எம்எல்ஏவுமான டி.ஆர்.பி. ராஜா, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை அதிகாரிகள், கட்சி மற்றும் கட்சி சார்பற்ற விவசாய சங்க பிரதிநிதிகள், ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரிகள், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் இடையே செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது,

எதிர்வரும் 14ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள வேளாண் தனிநிதி நிலை அறிக்கை தொடர்பாக இன்று விவசாய சங்கங்கள், அரசியல் கட்சி சார்ந்த விவசாய சங்கங்களின் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்தது முதல் வேளாண் தனி நிதிநிலை அறிக்கை வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் . திமுகவின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிப்படி வேளாண் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.

தனி நிதி நிலை அறிக்கை தொடர்பாக வேளாண் விளைபொருள் சார்ந்த வியாபார, ஏற்றுமதி சங்கங்களிடமும் பேசப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு தேவையான அம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றிருக்கும். விவசாயிகள் தன்னிறைவு அடைய, தலை நிமிர உதவும் பட்ஜெட் இது. கடந்த 10 ஆண்டுகளில் உழவர் சந்தைகள் முடக்கப்பட்டன. விவசாயிகள் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடையும் வகையில் நிதிநிலை அறிக்கை இருக்கும்.

தமிழகத்தில் 48,000 வாகனத்தில் கொரோனா காலகட்டத்தில் விவசாய விளைபொருட்கள் விற்க அனுமதி வழங்கப்பட்டது. இளைஞர்களுக்கு வேளாண் ஏற்றுமதி தொடர்பாக பயிற்சி வழங்கப்பட உள்ளது. வேளாண் சட்டம் எதிர்ப்பு தொடர்பாக திமுக அரசு உறுதியாக இருக்கிறது. கரும்பு சாகுபடியில் வெட்டுக்கூலி , கூலியாள் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சனை இருக்கிறது. எனவே கரும்பு அறுவடையில் புதிய தொழில் நுட்பங்களை அறிமுகம் செய்வது தொடர்பான அம்சங்கள் நிதி நிலை அறிக்கையில் இடம்பெறும்.

கரும்பு விவசாயிகளுக்கு 1200 கோடி தொகை நிலுவையில் உள்ளது. நிலுவைத் தொகை பிரச்சனையில் தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்படும். வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கலான பிறகு நலிவுற்ற தனியார் கரும்பு ஆலைகளுடன் அரசு சார்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும். பேச்சுவார்த்தை மூலம் நிலுவைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் " என்று கூறினார்.

Also Read: “பழனிசாமிகள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திருந்தமாட்டார்கள்”: அ.தி.மு.க கும்பலுக்கு பாடம் புகட்டிய ‘முரசொலி’!