Tamilnadu

10 நாள் குழந்தைக்கு இதய பாதிப்பு.. பெற்றோரே கைவிட்ட நிலையில் தொடர் சிகிச்சை அளிக்கும் அரசு மருத்துவர்கள்!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த தம்பதி ஒருவருக்கு கடந்த ஜூன் 26ஆம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. ஏற்கெனவே இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தைக்கு இதயத்தில் பிரச்சினை இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அந்தக் குழந்தையை சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளனர். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குழந்தையை மருத்துவர்கள் பரிசோதித்ததில், ஆக்சிஜனுடன் கூடிய ரத்தமும், ஆக்சிஜன் இல்லாத ரத்தமும் ஒன்றாகக் கலந்து குழந்தையின் இதயத்தில் இருந்து வெளியேறியது தெரியவந்தது.

மேலும், குழந்தையின் உடலில் ஆக்சிஜன் அளவும் குறைந்து ஆபத்தான நிலையில் இருப்பதை அறிந்து குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த குழந்தை இனி பிழைக்காது எனவே எங்களிடம் கொடுத்துவிடுங்கள் என குழந்தையின் பெற்றோர் மருத்துவர்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால் அதற்கு மருத்துவர்கள் துளியும் அனுமதிக்காத நிலையில், ஒருகட்டத்தில் குழந்தை தங்களுக்கு வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துவிட்டு, அதன் பெற்றோர் வீட்டுக்குச் சென்றுள்ளனர். ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத மருத்துவர்கள், குழந்தைக்குத் தொடர்ந்து மேல் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அந்தக் குழந்தைக்க்கு 12 வார கால மருத்துவ கண்காணிப்பு முடிந்தவுடன் அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். மேலும், குழந்தை நல மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்கும் அந்தக் குழந்தைக்கு, தாய்ப்பால் வங்கி மூலம், தாய்ப்பால் வழங்கப்பட்டு வருகிறது.

பிறந்து 10 நாட்களே ஆன குழந்தையைப் பெற்றோரே கைவிட்ட நிலையில், அக்குழந்தைக்கு சிகிச்சைக்கு அளிக்கும் அரசு மருத்துவர்களின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: “நம் ராஜதந்திரம் அனைத்தும் வீணாகிவிட்டதே!” : ATM இயந்திரத்திலேயே வசமாக மாட்டிக்கொண்ட வடமாநில திருடன்!