Tamilnadu
“7 பேருக்கு தூக்கு, 2 பேருக்கு ஆயுள் தண்டனை” : மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு!
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் கடந்த 2013ம் ஆண்டு, செப்டம்பர் 9ம் தேதி பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கூலிப்படையினரால் வெட்டப்பட்டார். தலை, கழுத்து, கை என்று 20க்கும் மேற்பட்ட வெட்டுக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த வழக்கில் பொன்னுசாமி, மேரி புஷ்பம், பாசில், போரிஸ், வில்லியம், ஏசுராஜன், ஜேம்ஸ் சதீஷ்குமார், முருகன், செல்வப்பிரகாஷ், ஐயப்பன் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர். குற்றம்சாட்டப்பட்ட 10 பேரில் 2 பேர் வழக்கறிஞர்கள், 2 பேர் ஆசிரியர்கள், ஒருவர் அரசு மருத்துவர், ஒருவர் என்ஜினியர், மற்றவர்கள் டிகிரி மற்றும் டிப்ளமோ படித்தவர்கள். வழக்கு நடைபெற்ற காலத்தில் ஐயப்பன் அப்ரூவர் ஆகிவிட்டார்.
கடந்த 6 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி கொரோனா காலத்திலும் நேரடி விசாரணையாக தினம்தோறும் நடைபெற்றது. அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.விஜயராஜ் ஆஜரானார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆதரவாக மூத்த வழக்கறிஞர்கள் கோபாலகிருஷ்ண லக்ஷ்மணராஜு, ரகுநாதன், சந்திரசேகர் உள்ளிட்டோர் ஆஜரானார்கள்.
அரசுத் தரப்பில் 57 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 173 ஆவணங்கள், 42 சான்று பொருட்கள் குறியீடு செய்யப்பட்டது. எதிரிகள் தரப்பில் 3 சாட்சிகள் விசாரிக்கபட்டனர். 7 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டது.
சாட்சி விசாரணை முடிவடைந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி பொன்னுசாமி, வழக்கறிஞர் பாசில், வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், என்ஜினீயர் போரிஸ், முருகன், செல்வபிரகாஷ் ஆகிய ஏழு பேருக்கு தூக்கு தண்டனையும் மேரி புஷ்பம், கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கித் தீர்ப்பளித்தார்.
Also Read
-
12-ம் வகுப்பு பொதுத் தேர்வு : தேர்ச்சி பெற்ற டாப் 3 மாவட்டங்கள் - பட்டியல் இதோ !
-
12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு - இந்த முறையும் மாணவிகளே சாதனை !
-
“அழிவை உருவாக்க துடிக்கும் பாஜக... சட்டத்தை மாற்ற நினைப்பவர்களை மக்கள் மாற்றுவார்கள்” : முரசொலி சூளுரை!
-
தேர்வு முடியும் முன்பே வெளியான தேர்வுத்தாள் : ராஜஸ்தான் நீட் தேர்வில் நடைபெற்ற மாபெரும் மோசடி !
-
காசாவுக்கு பிறகு லெபனானை தாக்க தயாராகும் இஸ்ரேல் ? எல்லையில் இருந்து 1,80,000 பேர் இடம்பெயர்வு !