Tamilnadu

சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்தைச் சூறையாடிய மர்ம நபர்... யார் இவர்? காரணம் என்ன? - குழம்பும் நிர்வாகம்!

சென்னை ராயபுரத்தில் சத்தியம் தொலைக்காட்சி அலுவலகம் உள்ளது. இங்கு நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் காரில் வந்துள்ளார். அப்போது அலுவலக பாதுகாவலர்கள் அவரிடம் யாரைப் பார்க்க வேண்டும் எனக் கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் நிர்வாக வேலையாக வந்துள்ளேன் என கூறியுள்ளார். அவரது பேச்சை நம்பி அவர்கள் உள்ளே அனுமதித்துள்ளனர். பிறகு அலுவலகத்திற்குள் வந்த அந்த மர்ம நபரிடம் அலுவலக ஊழியர்கள் விசாரித்துள்ளனர்.

அப்போது, பேசிக் கொண்டிருந்த அந்த நபர் திடீரென தான் எடுத்து வந்திருந்த பட்டாக்கத்தி மற்றும் கேடயத்தை எடுத்து அங்கிருந்த கண்ணாடி மேசை, டிவி, கம்ப்யூட்டர் என அனைத்தையும் அடித்து நொறுக்கிச் சேதப்படுத்தியுள்ளார்.

இவரது நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அங்கு வந்த போலிஸார் அவரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர், அவரிடம் நடத்திய விசாரணையில், கோவையைச் சேர்ந்த ராஜேஷ்மார் என்பது தெரியவந்தது. அவரது தந்தை தர்மலிங்கம் கோவை அரசு மருத்துவமனை மண்டல மருத்துவ அலுவலராக பணியாற்றி ஓய்வுபெற்றவர் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும், சத்தியம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் நேரில் வந்த பிறகுதான், எதற்காக அலுவலகத்தைச் சேதப்படுத்தினேன் என்பதைச் சொல்ல முடியும் என போலிஸ் விசாரணையில் ராஜேஷ்மார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து எதற்காக அலுவலகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தினார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சத்தியம் தொலைக்காட்சியில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்குப் பத்திரிகையாளர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Also Read: தொல்லியல் ஆய்வுகள் வீண் வேலையா? இந்தியாவின் வரலாறு தமிழகத்திலிருந்து தொடங்கும் -ரவிக்குமார்MP தக்க பதிலடி