Tamilnadu

’நட்புக்காக’ பாணியில் உயிரை துறக்க துணிந்த மூவர் - நண்பர்கள் தினத்தில் திருவாரூரில் நடந்த சோக நிகழ்வு!

திருவாரூர் மாவட்டம் கப்பலுடையான் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். இவரது நண்பர்கள் அசோக்குமார், ஆசைத்தம்பி. இவர்கள் மூன்று பேரும் இணைபிரியாத நண்பர்களாக வலம் வந்துள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் மூன்று பேரும் நிரந்தராக எந்த வேலைக்கும் செல்லாமல் சின்ன சின்ன கூலி வேலைகளை மட்டும் செய்து வந்துள்ளனர். இதில் கிடைக்கும் பணத்தையும் வீட்டில் கொடுக்காமல் தினந்தோறும் மது அருந்தி ஊர் சுற்றி வந்துள்ளனர்.

இதனால் ஆனந்தின் தந்தை கார்த்திகேயன், குடித்துவிட்டு ஊர் சுற்றுவதைக் கண்டித்துள்ளார். இதனால் மனவேதனையடைந்த ஆனந்த் மது அருந்தும்போது நண்பர்கள் ஆசைதம்பி மற்றும் அசோக்குமார் ஆகியோரிடம் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார்.

அப்போது, நீ மட்டும் ஏன் தனியா தற்கொலை செய்து கொள்ள வேண்டும், நாம மூன்று பேரும் சேர்ந்தே தற்கொலை செய்து கொள்வோம் என கூறி மதுவில் பூச்சி மருந்தைக் கலந்து குடித்துள்ளனர்.

இதனை அறிந்த இவர்களது உறவினர்கள் மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்குச் சிகிச்சை பலனின்றி ஆனந்த் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் நண்பர்கள் அசோக்குமார், ஆசைதம்பி ஆகியோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்கள் தினமான இன்று மூன்று நண்பர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 'தலைமுடியைக் கிண்டல் செய்ததால் ஆத்திரம்'... பீர் பாட்டிலால் மண்டை உடைப்பு- ஒருவர் கொலை: 5 பேர் கைது!