Tamilnadu

கொரோனா பரவல்: தடைகள்.. புதிய கட்டுப்பாடுகள்.. கோவையில் அமலாகும் புதிய நடைமுறைகள் என்னென்ன? முழுத் தகவல்!

தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளின்றி ஆகஸ்ட் 09ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

குறிப்பாக கேரளாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்ததைத் தொடர்ந்து அங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்பட்டுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில், கேரளாவின் எல்லையில் உள்ள கோவை மாவட்டத்தில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அந்தவகையில், நேற்றைய தினம், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட காவல் ஆணையர் மற்றும் பல்வேறு வர்த்தக சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து நாளை (ஆகஸ்ட் 2) முதல் கோவை மாவட்டத்திற்கு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

கோவை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை, காந்திபுரம் 5, 6, 7வது தெருக்கள், ஒப்பணக்கார வீதி, ராமமூர்த்தி சாலை, சாரமேடு சாலை, ரைஸ் மில் சாலை, என்.பி இட்டேரி சாலை, எல்லை தோட்ட சந்திப்பு, துடியலூர் சந்திப்பு ஆகிய தெருக்களில் இயங்கும் அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்படுகிறது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்களும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அமர்ந்து 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து மார்க்கெட்டுகளில் மொத்த விற்பனை நிலையங்களுக்கு மட்டும் அனுமதி, சில்லரை விற்பனைக்கு அனுமதியில்லை மற்றும் 50 சதவீத கடைகள் சுழற்சி முறையில் இயங்க அனுமதிக்கப்படும். சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் இதனை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

* கேரளா - தமிழ்நாடு மாநில எல்லைகள் அனைத்தும் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேற்படி சோதனைச்சாவடி வழியாக கோயம்புத்தூர் மாவட்டத்திற்குள் வரும் பயணிகள் அனைவரும் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட RT-PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட கோவிட்யின்மை சான்று அல்லது கொரோனா தடுப்பூசி (2 தவணைகள்) செலுத்தப்பட்டதற்கான சான்று கண்டிப்பாக உடன் வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் சோதனைச் சாவடியிலேயே Random RT-PCR பரிசோதனை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “பா.ஜ.க-வினரிடம் எப்போதுமே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” : மோடி அரசை வெளுத்துவாங்கிய கனிமொழி எம்.பி!