Tamilnadu

ஓடும் மின்சார ரயிலில் கடத்தப்பட்ட 1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்.. ரயிலில் நடந்த துணிகர கடத்தல் சம்பவம்!

அரக்கோணம் ரயில் நிலையம் வழியாக செல்லும் ரயிலில், ரேசன் அரிசி கடத்துவதாக ரயில்வே பாதுகாப்பு படை இளநிலை உதவி ஆய்வாளர் ஜார்ஜ் ஸ்டீபன் அவர்களுக்கு வந்த ரகசிய தகவலையடுத்து ரயில்வே போலிஸார் அரக்கோணத்தில் இருந்து காஞ்சிபுரம் வழியாக வந்துகொண்டிருந்த மின்சார ரயிலில் தக்கோலம் அருகே திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது பயணிகளின் இருக்கைகளுக்கு கீழ் மறைத்து வைக்கபட்டிருந்த சுமார் 1,200 கிலோ இடைகொண்ட ரேஷன் அரிசி கடத்தப்படுவது கண்டறியப்பட்டது. ரயில்வே காவல்துறையினர் சோதனை செய்வதை கண்ட அரிசி கடத்தல்காரர்கள் தலைமறைவாயினர்.

மின்சார ரயிலில் கடத்தப்பட்ட 1200 கிலோ அரிசியை உதவி ஆய்வாளர் ஜார்ஜ் ஸ்டீபன் தலைமையில் பறிமுதல் செய்து ரயில் மூலம் காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்திற்கு கொண்டுவந்தனர்.

காஞ்சிபுரம் குடிமைப்பொருள் வட்ட வழங்கல் வட்டாட்சியர் வாசுதேவனுக்கு தகவல் அளித்ததன் பேரில் வட்ட வழங்கல் அலுவலர்கள் ரயிலிலிருந்த அரிசியை கைப்பற்றி நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து ரயில்வே போலிஸார் கூறுகையில், அரிசி கடத்தல்காரர்களிடம் இருந்து ஒரு கிலோ அரிசி 3 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை கமிஷன் கொடுத்து மொத்த விலை வியாபாரிகள் ரேஷன் அரிசியை வாங்கி, ஆந்திரா மாநிலங்களில் உள்ள தனியார் அரிசி ஆலை மில் உரிமையாளர்களிடம் ரூ.15 முதல் 20 ரூபாய் கொடுத்து, பாலிஷ் செய்து ரேஷன் அரிசியை கிலோ 40 முதல் 50 ரூபாய்க்கு விற்று லாபம் சம்பாதிக்கின்றனர். மின்சார ரயிலில் ரேஷன் அரிசி அதிக அளவு கடத்த தொடங்கியுள்ளனர். இந்த கடத்தலுக்கு ஒருசில ரேஷன்கடைக்காரர்களே மறைமுகமாக சில நபர்களை வைத்து கடத்தலில் ஈடுபட்டுள்ளார்கள்” எனத் தெரிவித்துள்ளனர்.

Also Read: “தமிழகத்தில் உள்ள கோவில்களில் இனி தமிழில் அர்ச்சனை செய்ய ஏற்பாடு” : அமைச்சர் சேகர் பாபு பேட்டி!