Tamilnadu

“பவணி எப்படி இருக்கா?” - விபத்தில் தோழி இறந்ததையே இதுவரை அறியாத யாஷிகா... பெற்றோர் உருக்கம்!

யாஷிகா ஆனந்த், தனது தோழியைப் பற்றி விசாரித்ததாகவும், மருத்துவர்கள் தற்போது தோழியின் மரணம் குறித்து யாஷிகாவிற்கு தெரியப்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியதால், பவணி வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வருவதாக கூறியதாக யாஷிகாவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

நடிகை யாஷிகா ஆனந்த் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் வேகமாக கார் ஓட்டி விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். அதே காரில் பயணித்த யாஷிகாவின் தோழி வள்ளிசெட்டி பவணி பலியானார்.

நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த 24ஆம் தேதி இரவு மாமல்லபுரம் அருகே உள்ள ஒரு ரிசார்ட்டில் இரவு பார்ட்டி முடிந்து 3 நண்பர்களுடன் காரில் சென்னை திரும்பி கொண்டிருந்தார். அப்போது அதிவேகமாக காரை ஓட்டியதால் நிலைதடுமாறி தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். யாஷிகா வேகமாக கார் ஓட்டியதுதான் விபத்துக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் போலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த விபத்தில் யாஷிகாவுக்கு இடுப்பு மற்றும் கால் எலும்பு முறிந்துள்ளதாகவும், வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. எலும்பு முறிவை சரிசெய்ய அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சில நாட்களில் மீண்டும் அறுவை சிகிச்சை நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து யாஷிகாவின் தங்கை ஓஷேன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழுதபடி வெளியிட்டுள்ள வீடியோவில், “யாஷிகாவுக்கு ஒரு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. ஆனால் இன்னும் நிறைய எலும்பு முறிவுகள் இருப்பதால் அதற்காக மேலும் அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

விபத்து குறித்து யாஷிகாவின் குடும்பத்தினர் கூறும்போது, “யாஷிகா சுயநினைவுடன் இருக்கிறார். தோழி வள்ளிசெட்டி பவணி இறந்தது அவருக்குத் தெரியாது. எங்களிடம் பவணி குறித்து யாஷிகா விசாரித்தபோது வெண்டிலேட்டரில் இருப்பதாக சொல்லி இருக்கிறோம்.

யாஷிகாவுக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததால் அதிர்ச்சியான விஷயங்களை சொல்லவேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இரண்டு மாதங்கள் கழித்துத்தான் யாஷிகாவால் நடக்க முடியும் என்றும், 3 மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறினர்” எனத் தெரிவித்துள்ளனர்.

Also Read: நடிகை யாஷிகா ஆனந்த் கார் மோதி இளைஞர் படுகாயம்? குடி போதையில் விபத்து ஏற்பட்டதா? - போலிஸ் விளக்கம்!