Tamilnadu

கொடுத்த வாக்குகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றும் திமுக; சிறு,குறு தொழில்கள் ஏற்றம்பெற அரசாணை பிறப்பித்த முதல்வர்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரையின் போது, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மேம்படுத்த குழு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், தமிழக அரசின் தொழில் துறை முன்னாள் செயலாளர் சுந்தரதேவன் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த குழுவில் பகுதி நேர உறுப்பினராக மாநில வளர்ச்சி குழுவின் உறுப்பினராக உள்ள பேராசிரியர் விஜயபாஸ்கர்,நிதி துறையில் நீண்ட அனுபவம் பெற்ற ஆர்பிஐ வங்கி முன்னாள் உறுப்பினர் பிந்து ஆனந்த், எஸ்டிபிஜ வங்கியின் முன்னாள் தலைவர் பாலசுப்ரமணியம், ஏற்றுமதி கூட்டமைப்பு கழகத்தின் மண்டல தலைவர் இஸ்ரா அகமது உள்ளிட்ட 7 பேர் உறுப்பினராக இடம் பெற்றுள்ளனர்.

அதுமட்டுமின்றி அரசு சாரா உறுப்பினர்களாக, நிதித்துறை செயலாளர், தொழில்துறை செயலாளர், சிறு குறு நடுத்தர தொழில்துறை செயலாளர், தொழில் துறை ஆணையர், மாநில அளவிலான வங்கிக்குழு தலைவர் உள்ளிட்ட 5 நபர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஏற்றுமதியில் சிறந்து விளங்க பரிந்துரைகளை வழங்கும் என்றும், நிறுவனத்திற்கு தேவையான உட்கட்டமைப்பு, மனிதவளம் மற்றும் தேவையான நிலம் ஆகியவற்றை கண்டறிந்து உதவிகளை மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி,கொரோனா பரவல் காரணமாக சிறுகுறு நடுத்தர தொழில்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கிடுதல்,துறையை மேம்படுத்த குறுகிய கால மற்றும் நீண்டகால திட்டங்களை பரிந்துரைத்தல்,சிறு குறு மற்றும் நடுத்தர தொழிலில் நிதிச்சிக்கல் ஏற்பட்டதற்கான காரணங்களை கண்டறிதல் உள்ளிட்ட பணிகளை இந்த குழு மேற்கொள்ளும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் கடன் பெறும் முறையை எளிமையாக்குதல், நிறுவனங்களின் உற்பத்தி பொருட்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுதல், தொழில்களை மேம்படுத்துவதற்கான புதிய முயற்சிகளை பரிந்துரைத்தல்,தொழில் ரீதியில் பின் தங்கிய மாவட்டங்களில் சிறுகுறு நடுத்தர தொழில்களை ஊக்குவிப்பதற்கான பரிந்துரைகள் வழங்குதல் ஆகிய பணிகளை மேற்கொண்டு, மூன்று மாதத்தில் தமிழக அரசிற்கு அறிக்கை சமர்ப்பிக்கும் எனவும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Also Read: நாட்டிலேயே முதல்முறை..தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி: தொடங்கிவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!