Tamilnadu

“10 ஆண்டுகளாக பிச்சை எடுத்து சேர்த்த 3 லட்சத்தை திருடிய மர்ம நபர்” : சங்கரன்கோவில் முதியவர் வேதனை !

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நொச்சிகுளத்தை சேர்ந்தவர் சண்முகையா. இவர் பிரதான சாலைகள், கோவில் வாசல் போன்ற இடங்களில், தலையில் மூட்டையை தினமும் சுமந்து செல்லும் இவர் சங்கரன்கோவில் மக்களுக்கு நன்கு பரிச்சயம்.

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு அரிசி ஆலையில் பணிபுரிந்து வந்த இவர் உடல் நிலை குறைவு காரணமாகவும், மருத்துவ செலவிற்கு உதவ உற்றார் உறவினர்கள் யாரும் இல்லாததாலும் வேலையை விட்டு சங்கரன்கோவில் நகர் பகுதிகளில் வழிப்போக்கர்களிடமும் கடைகளிலும் யாசகம் கேட்டு பிழைப்பு நடத்தியுள்ளார்.

இதில் வரும் பணத்தை கொண்டு தனது மருத்துவ செலவு, உணவு போன்ற இதர செலவுகளையும் மேற்கொண்டு வந்துள்ளார். அதில் மிச்சமாகும் பணத்தை தான் வைத்திருக்கும் மூட்டையில் சேமித்து வைத்தாக சண்முகையா தெரிவித்துள்ளார். இந்நிலையில், இதை கவனித்து வந்த மர்ம நபர் ஒருவர் இன்று காலை தேநீர் கடையில் சண்முகையா தேநீர் அருந்தும் போது கண் இமைக்கும் நேரத்தில் அந்த மூட்டையை திருடி சென்றுள்ளார்.

இந்த சம்பவத்தால் தான் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், அந்த மூட்டையில் தான் கடந்த 10 ஆண்டுகளாக யாசகம் கேட்டு சிறுக சிறுக சேர்த்து வைத்துள்ள 3 இலட்ச ரூபாய் பணம் உள்ளது என்றும் சண்முகையா கூறியுள்ளார்.

இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. சங்கரன்கோவில் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து தனது பணத்தை மீட்டு தருமாறு சண்முகையா கோரிக்கை வைத்துள்ளார்.

Also Read: “ஏலத் தோட்ட தொழிலாளி இப்போது உயர்நிலைப்பள்ளி ஆசிரியை”: PhD படிக்கும் சாதனைச் செல்வி செல்வமாரியின் கதை!