Tamilnadu

மகளிர், குழந்தைகள், திருநங்கையர்களின் உரிமைகளை பாதுகாப்பு வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (28.07.2021) தலைமைச் செயலகத்தில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, சமூக சீர்திருத்தத்துறை ஆகிய துறைகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைப்பெற்றது.

இக்கூட்டத்தில், மகளிர், குழந்தைகள், மூன்றாம் பாலினர், மூத்த குடிமக்களின் பாதுகாப்பு, உரிமை மற்றும் நலனை உறுதி செய்திட வேண்டும் என்று அறிவுறுத்திய முதலமைச்சர் அவர்கள், பெண் கல்வி மற்றும் சமூகச் சீர்த்திருத்தங்களுக்காகச் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகளில் குறிப்பாக, திருமண நிதியுதவி திட்டங்களில் தகுதிவாய்ந்த பயனாளிகள் எவரும் விடுபடாமல் உரிய காலத்தில் பயன்களை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

குழந்தைத் திருமணம், பெண்சிசுக் கொலை போன்ற சமூக அவலங்களைக்களைய உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, இது குறித்த விவரங்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்றும், அதற்கான சட்டங்கள் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

குழந்தைத் திருமணங்கள் அதிகமாக நடைபெறும் விழுப்புரம், திண்டுக்கல், ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் தேனி மாவட்டங்களில் அதிக கவனம் செலுத்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் மற்றும் சத்துணவு திட்டம் மூலம் வழங்கப்படும் உணவு, உலர் உணவு பொருட்கள், சத்து மாவு, முட்டைகள் ஆகியவற்றைச் சுத்தமாகவும், உயர் தரமானதாகவும் வழங்குமாறு அறிவுறுத்தினார்.

குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையில் இந்திய அளவில் தமிழ்நாடு சிறப்பாகச் செயல்பட்டாலும், ஊட்டச்சத்துப் பற்றாக்குறையினால் வரும் உயரக்குறைவு (stunting), மிகுந்த மெலிவுத்தன்மை, இரத்தச் சோகை ஆகிய குறைபாடுகள் அதிகம் காணப்படும் மாவட்டங்களைக் கண்டறிந்து சிறப்புக் கவனம் செலுத்தித் தமிழகத்தினை ஊட்டச்சத்துக் குறைபாடில்லா மாநிலமாக உருவாக்க அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மேலும், பாதுகாப்பு தேவைப்படும் அனைத்துக் குழந்தைகளையும் கண்டறிந்து பராமரிப்பு இல்லங்கள் மூலம் சிறப்பான கல்வி அளிக்கவும் கேட்டுக் கொண்டார். கொரோனா நோய்த்தொற்றுக் காரணமாகத் தாய் அல்லது தந்தை அல்லது இருவரையும் இழந்த குழந்தைகளை கண்டறிந்து தற்போது அறிவிக்கப்பட்ட வைப்புத் தொகைத் திட்டத்தில் பயன்பெற உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்ட முதலமைச்சர் அவர்கள், திருநங்கையர் கல்வியறிவு பெற்று, சுயமாக இயங்கவும், பாதுகாப்புடன் வாழவும் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் திருநங்கையர் நலவாரியத்தின் மூலம் மேற்கொண்டு அவர்களுக்குச் சிறப்பானதொரு வாழ்க்கையை உருவாக்கிட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

அரசு உதவியுடன் செயல்படும் 129 முதியோர்களுக்கான இல்லங்களை அவ்வப்போது உயர் அலுவலர்கள் பார்வையிட்டு, அந்த இல்லங்கள் அனைத்து வசதிகளுடன் இயங்குவதையும், முதியோர்கள் உடல்நலத்துடன் மகிழ்வுடன் இருப்பதையும் உறுதி செய்திட வேண்டும் என்றும், அரசு உதவி பெறாமல் இயங்கும் அனைத்து முதியோர் இல்லங்களும் பதிவுபெற்று அங்கீகாரத்துடன் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

பணிபுரியும் மகளிர் விடுதி இல்லாத மாவட்டங்களில் விடுதிகள் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான இல்லங்களில் அவர்களின் பாதுகாப்பினையும், கவனிப்பினையும் உறுதிசெய்திட வேண்டும் எனவும், சட்டப்படி பதிவுசெய்யப்பட்ட இல்லங்கள் உரிய வசதிகளுடன் நடத்தப்படுவதைத் தொடர்ந்து ஆய்வுசெய்து கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

சமூகச் சீர்திருத்தத்துறை மூலம், சமூக நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையை நிலைநாட்டுவதற்கு உரிய ஆலோசனைகள் மற்றும் விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொள்ளவும், பெண் கல்வியை உறுதிசெய்திடவும், மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சமூகச் சீர்திருத்தம் குறித்த பேச்சுப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள் நடத்தவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.

Also Read: மா.சு.,வின் கால்களுக்கு அன்பு முத்தங்கள் : அமைச்சரின் பணி குறித்து உருகிய நாஞ்சில் சம்பத்!