Tamilnadu

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஊழியர்கள் போராட்டம்!

விழுப்புரத்தில் அ.தி.மு.க ஆட்சியின்போது ஜெயலலிதா பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது. புதிதாக தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்த நிலையில், “ஜெயலலிதா பல்கலைக்கழகத்திற்கு பெயர் மட்டும் தான் வைக்கப்பட்டுள்ளது. எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. எனவே இந்த பல்கலைக்கழகம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படும்” என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.கவினர் போராட்டம் நடத்தினர். விழுப்புரத்தில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், "ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை மூடிவிட்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இணைப்பதாக கூறுகின்றனர். இந்தியாவிலேயே மிகவும் மோசமாக சீரழிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகம்" எனப் பேசியுள்ளார்.

சி.வி.சண்முகத்தின் இந்தப் பேச்சுக்கு கல்வியாளர்கள் முதல் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் இன்று பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, உலகத்தரம் வாய்ந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகம் குறித்து அவதூறாகப் பேசியதை சி.வி.சண்முகம் திரும்பப் பெற வேண்டும். மேலும் தமிழ்நாடு அரசு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். பின்னர் பல்கலைக்கழக பதிவாளரிடம் ஊழியர் சங்கத்தினர் மனு அளித்தனர்.

Also Read: “வேண்டும்.. வேண்டும்..! நீதி வேண்டும்..!” : தமிழால் அதிர்ந்த நாடாளுமன்றம்!