Tamilnadu

“என்னை போதைக்கு அடிமையாக்கியதால் தாய்மாமாவை கொன்றேன்” - இளைஞர் அதிர்ச்சி வாக்குமூலம்!

தனது தாயைப் பற்றி தவறாகப் பேசியதால் தாய்மாமனை படுகொலை செய்ததாக இளைஞர் வாக்குமூலம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு அருகே உத்திரமேரூரை அடுத்த மானாமதி இருளர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் முரளி (25). கூலி தொழிலாளி. இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு 4 மாத கை குழந்தை உள்ளது.

முரளி கடந்த 25ஆம் தேதி செங்கல்பட்டை அடுத்த அமணம்பாக்கம் இருளர் பகுதியில் உள்ள மாமியார் கன்னியம்மாள் வீட்டிற்கு சென்றுள்ளார் முரளி. அங்கு கன்னியம்மாள், வெளியூர் சென்றிருந்ததால் வீட்டை திறந்து தங்கியுள்ளார்.

அப்போது, மீஞ்சூரில் உள்ள தாய்மாமன் தினேசுக்கு (40) போன் செய்து, ‘செங்கல்பட்டில் உள்ள மாமியார் வீட்டுக்கு வந்துள்ளேன். உன்னை பார்க்க வேண்டும். மது வாங்கி வைத்துள்ளேன், வா இருவரும் சேர்ந்து குடிப்போம்’ என்று கூறியுள்ளார்.

தினேஷ் வரவே, இருவரும் மது அருந்தியுள்ளனர். இதையடுத்து, தனது நண்பர்களையும் மது அருந்த முரளி அழைத்துள்ளார். அவரது நண்பர்களை பார்த்த தினேஷ், ‘இவர்களை ஏன் அழைத்தாய்’ என்று கேட்டுள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

போதை தலைக்கு ஏறியதும், முரளி மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர், தினேஷை அரிவாளால் கழுத்து, தலை என உடலில் சரமாரியாக வெட்டினர். ரத்த வெள்ளத்தில் தினைஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதையடுத்து முரளி மற்றும் அவரது நண்பர்கள் வீட்டின் கதவை பூட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

தகவல் அறிந்து வந்த செங்கல்பட்டு போலிஸார் தினேஷின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து அமணம்பாக்கத்தைச் சேர்ந்த முரளியின் நண்பர் பிரசாத் (24) என்பவரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

இந்நிலையில் வேளச்சேரி பகுதியில் பதுங்கியிருந்த முரளியை நேற்றிரவு போலிஸார் கைது செய்தனர். கைதான முரளி விசாரணையில் அளித்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணையின்போது போலிஸாரிடம் பேசிய முரளி, “என்னை குடிப்பழக்கத்துக்கு ஆளாக்கியவர் தினேஷ். புகையிலை, கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கத்துக்கு அடிமையாக்கினார். மேலும் பல குற்ற வழக்குகளில் சிக்க வைத்தார். செலவுக்கு பணம் இல்லாததால் திருடும்படி கூறினார்.

என் அம்மாவை பற்றி என்னிடமே தவறாகப் பேசினார். இதனால் ஆத்திரமடைந்த நான், அவரை போன் செய்து வரவழைத்தேன். விடிய விடிய குடிக்க வைத்தேன். சிக்கன், மட்டன் என பலவகையான உணவுகளை வாங்கிக் கொடுத்தேன். மறுநாள் காலையிலும் மது அருந்தினோம். என் அம்மாவை பற்றி தினேஷ் பேசிய வார்த்தைகள் என்னை வதைத்தன. அதனால் அவரைக் கொலை செய்தேன்.

என் நண்பர்கள், தினேஷின் கால்களை பிடித்துக் கொள்ள அவரது தலையில் வெட்டினேன். இறந்ததை உறுதி செய்த பின்னர் கதவைப் பூட்டி விட்டுத் தப்பித்தோம்” என வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த விவகாரம் செங்கல்பட்டு பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: இளைஞரை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்த பா.ஜ.க நிர்வாகி... புதுச்சேரியில் கொடூரச் சம்பவம்!