Tamilnadu

“வரதட்சணை கேட்டு நிர்வாணப்படுத்திய மாமியார்... விபரீத முடிவெடுத்த இளம்பெண்” : ராஜஸ்தானில் கொடூரம்!

கேரள மாநிலத்தில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்நிலையில் இதேபோன்று ராஜஸ்தான் மாநிலத்திலும் கொடுமை அரங்கேறியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பாகூர் பகுதியைச் சேர்ந்தவர் பைருலால். இவரது மகள் பிரியா. இவருக்கும் பந்திர் பகுதியைச் சேர்ந்த முகேஷ் சான்ஸி என்பவருக்கும் ஏப்ரல் 26ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து முகேஷ் சான்ஸியின் பெற்றோர் பிரியாவிடம் வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனால் பிரியா கணவர் வீட்டிலிருந்து வெளியேறி பெற்றோர் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

பின்னர் சில நாட்கள் கழித்து பிரியாவை சமாதானப்படுத்தி மீண்டும் முகேஷ் சான்ஸி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து மீண்டும் மாமியார், மாமனார் பிரியாவிடம் வரதட்சணை கேட்டு அடித்துத் துன்புறுத்தியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த பிரியா ஜூலை 22ம் தேதி விஷம் குடித்து தற்கொலை முயன்றுள்ளார். உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முன்னதாக தற்கொலை செய்வதற்கு முன்பு பிரியா வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இதில், வரதட்சணை கேட்டு கணவரின் பெற்றோர் கொடுமைபடுத்துகிறார்கள். மேலும் மாமனார் முன்னிலையில் நிர்வாணப்படுத்தியதால், அவமானம் தாங்காமல் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் எனப் பேசியுள்ளார்.

இந்த வீடியோவை ஆதாரமாக வைத்து போலிஸார் கணவர், மாமனார் மற்றும் மாமியார் உட்பட ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: கண்ணாடியை உடைத்து கழுத்தை அறுத்துக் கொண்ட மனநலம் பாதிக்கப்பட்டவர் - உயிரை காப்பாற்றிய இளைஞர்கள் !