Tamilnadu

தம்பியோடு சேர்ந்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி... 6 பேரை கைது செய்த போலிஸ் : வெளிவந்த அதிர்ச்சி காரணம்!

கோவை ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சேதுராஜாராம் சிங். இவர் சவுந்தர்யா என்ற பெண்ணை காதலித்து ஆறு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இந்த காதல் தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சவுந்தர்யா துப்புரவுப் பணியாளராக வேலை பார்த்து வருகிறார். அங்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநராக உள்ள குணசேகர் என்பவருடன் சவுந்தர்யா நட்பாகப் பழகி வந்துள்ளார்.

இந்த நட்பு காதலாக மாறியுள்ளது. இதனை அறிந்த கணவர் சேதுராஜாராம் மனைவியைக் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து கணவர் சேதுராஜாராமை சவுந்தர்யா கொலை செய்யத் திட்டம் போட்டுள்ளார். இதற்காக குணசேகர் மற்றும் தனது தம்பி ஆகியோரின் உதவியை நாடியுள்ளார்.

பின்னர், நேற்று இரவு சேதுராஜாராம், சவுந்தர்யா இருவரும் வீட்டிலிருந்தனர். அப்போது குணசேகரன், சவுந்தர்யாவின் தம்பி மற்றும் அவரது நண்பர்கள் வீட்டிற்கு வந்து சேதுராஜாராமை தாக்கியுள்ளனர். அப்போது அவரின் கழுத்தை அறுத்துக் கொல்ல முயன்றுள்ளனர்.

அப்போது சேதுராஜாராமின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அவரின் வீட்டருகே திரண்டு வந்தனர். இதனைப் பார்த்து அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதுகுறித்து போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் நடந்த விவரங்களைக் கேட்டறிந்து மனைவி சவுந்தர்யா, குணசேகரன், சவுந்தர்யாவின் தம்பி மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேரை கைது செய்தனர். இதில் சவுந்தர்யாவின் தம்பி மற்றும் அவரது நண்பர்கள் மைனர் சிறுவர்கள் என்பதால் அவர்களை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் போலிஸார் அடைத்தனர்.

Also Read: “என்னை போதைக்கு அடிமையாக்கியதால் தாய்மாமாவை கொன்றேன்” - இளைஞர் அதிர்ச்சி வாக்குமூலம்!