Tamilnadu

அமைச்சர் வார்னிங் எதிரொலி: அடுத்தடுத்து சிக்கும் போதை பொருட்கள்; ஒரேநாளில் 1,051 கிலோ குட்கா பறிமுதல்!

தமிழகத்தை புகையிலை இல்லாத மாநிலமாக உருவாக்குவதற்காக தமிழக அரசு கடந்த 2013ஆம் ஆண்டு குட்கா மற்றும் போதைப் பொருட்களை தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர், காவல்துறை ஆணையர் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடைபெற்றது.

இந்த ஆலோசனைக்கு பிறகு நேற்று 1,051 கிலோ பறிமுதல் செய்தது மட்டுமல்லாமல் 39 பேர் கைது செய்யப்பட்டு அதில் 34 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஐ சி எப் பகுதியில் குட்கா விற்பனை செய்து வருவதாக ஆய்வாளருக்கு ரகசிய தகவல் வந்ததை அடுத்து போலீசார் மாறு வேடத்தில் நியூ அவடி ரோடு மற்றும் காந்திநகர் பகுதியில் உள்ள மளிகை கடையில் சோதனை செய்தார்கள்.

அப்போது அந்த இடத்தில் குட்கா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதில் அயனாவரம் வள்ளலார் தெருவைச் சேர்ந்த அரி 52 என்பவரை கைது செய்து விசாரணை செய்ததில் அம்பத்தூர் பசும்பொன் சாலையைச் சேர்ந்த கவியரசன் 26 என்றவர் குட்கா வாங்கி வந்து விற்பனை செய்து கொண்டதும் தெரியவந்தது.

மேலும் இவர்களுக்கு குட்கா பொருட்களை யார் அதிகபடியாக சப்ளை செய்கிறார்கள் என்ற விசாரணை துவங்கியபோது 350 கிலோ குட்காவை சுனில் என்ற நபரிடம் வாங்கி இருப்பதாக போலீசார் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் சுனில் என்பவர் தலைமறைவாகியுள்ளார். தற்போது ஹரி மற்றும் கலையரசன் ஆகியோர் 2 பேர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஐசிஎப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: இனி குட்கா விற்றால் இதுதான் கதி; தண்டனையை பட்டியலிட்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடும் எச்சரிக்கை!