Tamilnadu

“வேகமெடுக்கும் தயாரிப்பு பணிகள்.. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது?” : அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் !

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, சமூக நலன் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் மீளவிட்டான் பகுதியில் உள்ள சி.வா.குளத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள், இங்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து, தூத்துக்குடி நகரின் மத்தியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் பழைய பேருந்து நிலைய கட்டிட பணிகளை பார்வையிட்டு, இந்த பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்த அமைச்சர் கே.என்.நேரு பணிகளை ஆய்வு செய்தார்.

விரைவாக இந்த பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். இதைத்தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, “தூத்துக்குடி மாநகர பகுதிகளில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் திமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டால், கடந்த ஆட்சி காலத்தில் கண்டுகொள்ளாமல் விட்ட காரணத்தால் பணிகள் மெதுவாக நடைபெற்று. தற்போது இந்த பணிகள் துரிதப்படுத்தப்படும். இன்னும் மூன்று நான்கு மாதங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நிறைவு பெறும்.

இதுபோல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதற்கான அடிப்படை பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். மேலும் தி.மு.க தேர்தல் நேரத்தில் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, சில பகுதியில் உள்ள நகராட்சிகள் மாநகராட்சி ஆகும். சில பகுதியில் உள்ள பேரூராட்சிகள் நகராட்சிகள் தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகிறது. இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “கூட்டுறவுத் துறை மூலம் விவசாயிகளுக்கு ரூ.11,500 கோடிக்கு கடன் தர இலக்கு” : அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி !