Tamilnadu

“சந்திக்கும் அனைவருக்கும் புத்தகம்.. முதலமைச்சரின் ‘புத்தக’ அரசியல்” : ‘NEWS 7’ தொலைக்காட்சி புகழாரம்!

“சந்திக்கும் அனைவருக்கும் புத்தகம் வழங்கி, சம்பிரதாயத்தைச் சரித்திர நிகழ்வாக்குகிறார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்’’ என்று, ‘நியூஸ் 7’ செய்தித் தொலைக்காட்சி புகழாரம் சூட்டியுள்ளது.

இதுதொடர்பாக அத்தொலைக்காட்சி வெளியிட்ட சிறப்புப் பார்வை நிகழ்ச்சியில், குறிப்பிட்டதாவது:- அரசியல் தலைவர்கள் சந்திக்கும் போது பூங்கொத்து - சால்வை வழங்கப்படுவது ஒரு சம்பிரதாய நிகழ்வாகப் பின்பற்றப்படுகிறது. ஆனால் அப்படி சம்பிரதாயமாக வழங்கப்படும் பொருட்களையும் சரித்திர நிகழ்வாக்கும் முயற்சிக்கு வித்திட்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

“புத்தகம் போதும்; பூங்கொத்து வேண்டாம்!' என்று கூறியதுடன் நின்றுவிடாமல், சட்டமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்க ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு அழைப்பு விடுத்தபோதே, மாமல்லபுரத்தின் சிற்பக்கலை நுணுக்கங்களை எடுத்துரைக்கும் புத்தகத்தை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

பிரதமர் மோடியைச் சந்தித்தபோது முதலமைச்சர், “செம்மொழிச் சிற்பிகள்” என்ற புத்தகம் வழங்கியதாகத் தகவல் வெளியானது, பெரும் கவனத்தை ஈர்த்தது. 100 தமிழறிஞர்களின் வாழ்க்கை வரலாறு - அவர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு - அவர்களின் நூல்கள் உள்ளிட்டவை அடங்கிய நூலை முதலமைச்சர் அளித்ததன் மூலம், தமிழர் குறித்தும், தமிழரின் தேவை குறித்த பார்வையை முதலமைச்சர் ஏற்படுத்தியிருப்பதாகப் பேசப்பட்டது.

காங்கிரஸ் தலைவர் திருமதி. சோனியா காந்தி அவர்களைச் சந்தித்த பொழுது, திராவிடப் பண்பாடு குறித்த ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய Journey of A Civilization - Indus to Vaigai” என்ற புத்தகத்தை வழங்கிய முதலமைச்சர், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களைச் சந்தித்த பொழுது, “Multiple facets of My Madurai” என்ற புத்தகத்தை வழங்கினார்.

தமிழர் வாழ்வியலின் செறிவை, புத்தகத்தின் வழி தலைவர்களுக்குக் கடத்தும் பணியை முதலமைச்சர் செய்வதாகவே பேசப்பட்டது. “பத்மஸ்ரீ” விருது பெற்ற எழுத்தாளரும் ஓவியருமான மனோகர் தேவதாஸ் எழுதிய இந்தப் புத்தகம், முத்தமிழ்ச் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையின் அடையாளங்களுள் ஒன்று என்கிறார் - கலை விமர்சகர் கவிஞர் இந்திரன்.

அதேநேரத்தில் தமிழர்களுக்கென தனி அழகியல் கூறுகள் இருப்பதை இப்புத்தகம் எடுத்துக் கூறுவதாகத் தெரிவிக்கும் கவிஞர் இந்திரன், மதுரையில் உள்ள பாரம்பரியக் கட்டிடக் கலைகளை விளக்கும் சித்திரங்கள் நிறைந்த புத்தகம் எனவும் தெரிவிக்கிறார்.

கவிஞர் இந்திரன் கூறியதாவது: “தமிழ்நாட்டின் முதலமைச்சர் தமிழர்களுக்கென்று இருக்கிற தனிப்பட்ட பண்பாட்டு அடையாளமாகிய “Dravidian Architecture” என்று உலகம் முழுவதும் அறியப்பட்ட ஒரு பண்பாட்டுச் செல்வத்தை அறிமுகப்படுத்துவது; ஒரு புத்தகத்தைக் கொடுப்பதன் மூலமாக கலை விமர்சகர்களையும், ஓவியர்களையும், தமிழ் மக்களையும் பெருமைப்படுத்தி இருக்கிறார். அதற்காக தமிழ்நாட்டின் முதலமைச்சருக்கு நாங்கள் நன்றி சொல்கிறோம்.”- என்கிறார், கவிஞர் இந்திரன்.

ஒரு புத்தகத்தைக் கொடுப்பதன் மூலம் எழுத்தாளர்களையும், தமிழ் மக்களையும் முதலமைச்சர் பெருமைப்படுத்தி உள்ளதாகக் கூறும் அதேவேளையில், தமிழ் மக்களின் கலாச்சாரம் - பண்பாடு - வாழ்க்கை முறை ஆகியவற்றை விவரிக்கும் புத்தகங்களை முதலமைச்சர் தொடர்ந்து பலருக்கும் வழங்கிவருவது, அனைத்துத் தரப்பினரின் வரவேற்பையும் பெற்றுள்ளது என்றே கூறலாம். இவ்வாறு, ‘நியூஸ் 7’ தொலைக்காட்சி அச்சிறப்புப் பார்வை நிகழ்ச்சியில் குறிப்பிட்டுப் புகழாரம் சூட்டியுள்ளது.

Also Read: ஜப்பான் எப்போதுமே ஹைடெக் தான் - ஒலிம்பிக் பதக்கத்தை எதைக் கொண்டு உருவாக்கியுள்ளது தெரியுமா?