Tamilnadu

21 இடங்களில் வருமான வரி சோதனை - சிக்குகிறார் முன்னாள் அமைச்சர் கரூர் விஜயபாஸ்கர்?

அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவர் அமைச்சராக இருந்தபோது தனது துறையில் பல்வேறு முறைகேடு மற்றும் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக ஆட்சியின் போதே குற்றம் சாட்டப்பட்டு, அதுதொடர்பான வழக்கு ஒன்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

குறிப்பாக, இவர் அமைச்சராக இருந்தபோது, ஒரு குறிப்பிட்ட கம்பெனிகளிடம் மட்டும் ஒளிரும் பட்டை வாங்க போக்குவரத்துத்துறை வெளியிட்ட உத்தரவிற்கு உயர் நீதிமன்றமே தடை போட்டது. அதேபோல், ஜி.பி.எஸ் கருவி விவகாரத்திலும் உயர்நீதிமன்றம் தடையுத்தரவு வழங்கியது. இதுபோல் பல்வேறு முறைகேடுகளை பட்டியலிடமுடியும்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க ஆட்சி அமைந்தபிறகு, கடந்தக்கால ஆட்சியின் போது மக்கள் பணத்தை சுருட்டிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்த போது முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் படி, கரூரில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு மற்றும் ரெயின்போ டையிங், விஸ்வா எக்ஸ்போர்ட், எம்.சேண்ட் நிறுவனம் மற்றும் அமைச்சர் தம்பி சேகர் வீடு என மொத்தம் 20 இடங்களில் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலிஸார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் சாய் கிருபா அப்பார்ட்மெண்ட்டில் உள்ள விஜயபாஸ்கர் வீட்டிலும் சோதனை நடக்கிறது. மேலும், சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து 20 குழுவாக மொத்தம் 50 க்கும் மேற்பட்ட போலிஸார் இன்று காலை 7 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சரின் உதவியாள்கள் ரமேஷ் மற்றும் கார்த்தி, ஆதரவாளர் மற்றும் நிர்வாகி கே.சி.பரமசிவம் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக பல்வேறு புகார்கள் ஆதாரத்துடன் எழுந்த நிலையில், இந்த சோதனை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடதக்கது. இந்த சோதனையையொட்டி வீடுகள், நிறுவனங்களில் போலிஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

Also Read: ஊழல் முகட்டில் இருக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் அப்பாவி வேடத்தை கலைத்த ஐகோர்ட் - K.N.நேரு கடும் விமர்சனம்!