Tamilnadu

ஸ்நேக் பாபு போல் கொசுவை விரட்ட புகை: 2 பேர் பலி; இருவர் கவலைக்கிடம் - சென்னை பம்மலில் நடந்த சோக சம்பவம்!

சென்னை பல்லாவரம் அடுத்த, பம்மல், திருவள்ளுவர் தெரு, பொன்னி நகரில் ஒரு வீட்டில் நான்கு பேர் இரவு தூங்கியுள்ளனர்.

இன்று காலை வீடு முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்து வீட்டில் இருந்து புகை வெளியே வரத்துவங்கியுள்ளது. இதனை கண்ட மேல் தளத்தில் குடியிருக்கும் பெண் ஒருவர் வீட்டின் உரிமையாளர் மகனுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலின் பேரில் மகன் வந்து கதவை தட்டியும் திறக்காததால் வீட்டில் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது நான்கு பேர் படுத்த நிலையில் இருந்துள்ளனர்.

நான்கு பேரையும் மீட்டு ஆட்டோ மூலம் குரோம்பேட்டை  அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் புஷ்பலட்சுமி (55) என்ற பெண் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

மீதமுள்ள மூவரின் நிலை மோசமாக இருப்பதாக கூறி மேல் சிகிச்சைகாக இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் 11 வயது சிறுவனை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மருத்துவமனையில் சொக்கலிங்கம் (61), இவரது மகள் மல்லிகா (38), மல்லிகாவின் மகன் விஷால் (11), ஆகியோர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், விஷால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சொக்கலிங்கம் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனியில் கம்பவுண்டராக இருந்து ஓய்வு பெற்றவர்.

போலீசார் விசாரணையில் வீட்டிற்கு வெளியே சிறிய தட்டில் அடுப்பு கரியை கொண்டு எரியவிட்டு புகை போட்டுள்ளனர். அதே போல் வீட்டின் சமையலறையில் அடுப்பில் எண்ணெய் டின்னில் கரியை போட்டு எரித்து கொசுவை விரட்ட முயற்சித்துள்ளனர். பின்னர் அனைவரும் படுக்கையறையில் ஏசியை போட்டு விட்டு படுத்து உறங்கியுள்ளனர்.

கொசுவை விரட்ட போடப்பட்ட புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு நான்கு பேரும் மயக்க நிலைக்கு சென்றுள்ளனர். ஏற்கனவே புஷ்பலட்சுமி உயிரிழந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் விஷால் (11), என்ற சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக சங்கர் நகர் போலிசார் விசாரித்து வரும் நிலையில் பிரேத பரிசோதனையில் முடிவில் தான் இறப்பிற்கான காரணம் தெரியவரும் என்கின்றனர்.

Also Read: கும்பகோணத்தை அதிரவைத்த ‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’... பா.ஜ.கவை சேர்ந்த மோசடி கும்பலின் அதிர்ச்சிகர பின்னணி!